தோல்வி பயத்தால் பணத்தை வாரி இறைக்கும் திமுக: எதிர்க்கட்சிகள் சரமாரி குற்றச்சாட்டு!
தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக தோல்வியடையும் என உளவுத்துறை தகவல் வெளியானதைத் தொடர்ந்து, அக்கட்சி வாக்காளர்களுக்குப் பணப்பட்டுவாடா செய்து வருவதாக எதிர்க்கட்சிகள் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளன.
உளவுத்துறை தகவலால் அதிர்ச்சியடைந்த திமுக தலைமை, எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் 234 தொகுதிகளிலும் பணத்தைத் தண்ணீராக வாரி இறைப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன. குறிப்பாக, சென்னை வில்லிவாக்கம் மற்றும் கோவை தெற்கு உள்ளிட்ட தொகுதிகளில் ஒரு வாக்குக்கு ஆயிரம் முதல் பத்தாயிரம் ரூபாய் வரை விநியோகம் செய்யப்படுவதாகவும், பல ஆயிரம் கோடி ரூபாய் திமுக நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் வீடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆளுங்கட்சியினர் என்பதால் பணப்பட்டுவாடா நடப்பதைப் போலீசார் கண்டுகொள்ளாமல் வேடிக்கை பார்ப்பதாகவும், அதிகாரிகளும் இதற்கு உடந்தையாக இருப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன. இது குறித்து தேர்தல் அலுவலர்களிடம் தொகுதி வாரியாகப் புகார் அளித்துள்ள எதிர்க்கட்சிகள், தேர்தல் நியாயமாக நடைபெற பணப்பட்டுவாடாவுக்குக் கடிவாளம் போட வேண்டும் என்றும், தேர்தல் ஆணையம் தனது கண்காணிப்பைத் தீவிரப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளன.




