தமிழக பட்ஜெட் 2026: அரசு சேவைகள் விரைவில் கிடைக்க ‘சேவை உரிமை சட்டம்’ அறிமுகம்
தமிழக அரசின் முதல் பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் மரிய வில்சன் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இதில் அரசு சேவைகளை பொதுமக்களுக்கு உரிய நேரத்தில் வழங்கும் வகையில் ‘சேவை உரிமை சட்டம்’ கொண்டு வரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசின் சேவை வழங்கும் முறையை நவீனப்படுத்தவும், நிர்வாக செயல்பாடுகளை எளிமைப்படுத்தவும் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அரசு நிர்வாகத்தில் சீர்திருத்தங்களை மேற்கொள்ள தலைமைச் செயலாளர் தலைமையில் ஆளுமை செயல்முறை சீர்திருத்தக் குழு அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்டத்தின் அடிப்படையில், பொதுமக்கள் கேட்கும் அரசு சேவைகள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் சேவை உரிமை சட்டம் இயற்றப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் நலனை கருத்தில் கொண்டு, பொதுவிநியோக திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அத்தியாவசிய பொருட்களை அவர்களின் வீடுகளுக்கே சென்று வழங்கும் திட்டம் விரிவுபடுத்தப்படும். இதற்காக ரூ.718 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும், பொதுவிநியோக திட்டத்தின் மூலம் பொட்டலமிட்ட கோதுமை மாவு வழங்கும் முன்னோடி திட்டம் ரூ.18 கோடி செலவில் செயல்படுத்தப்பட்டு விரிவுபடுத்தப்படும். உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறைக்கு ரூ.14,830 கோடியும், உணவு மானியத்துக்காக ரூ.14 ஆயிரம் கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழல் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் தமிழ்நாடு நெய்தல் மீட்சி இயக்கம் செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் கீழ் கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ரூ.40 கோடி செலவில் 2,500 ஹெக்டேர் பரப்பளவில் புதிய அலையாத்தி காடுகள் உருவாக்கப்படும்.
நெய்தல் மீட்சி இயக்கத்துக்காக மொத்தம் ரூ.322 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறைக்கு ரூ.1,762 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
விளையாட்டுத் துறையை மேம்படுத்தும் வகையில், தமிழகம் முழுவதும் ரூ.50 கோடி மதிப்பீட்டில் 10 ஒலிம்பிக் சிறப்பு மையங்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 8 முதல் 18 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த பயிற்சி வழங்க ரூ.5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும், தேசிய மற்றும் சர்வதேச விளையாட்டு போட்டிகளில் சிறந்து விளங்கும் 500 வீரர்களுக்கு நிதியுதவி வழங்க கூடுதலாக ரூ.22 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு கிராமிய விளையாட்டு போட்டிகளை நடத்த ரூ.42 கோடியும், தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த ரூ.2 கோடியும் வழங்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்புகள் மூலம் அரசு சேவைகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விளையாட்டு வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பட்ஜெட் திட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



