திருவாரூரில் தலைமைக் காவலரை தாக்கிய தவெக வழக்கறிஞர் அணி நிர்வாகி கைது
திருவாரூரில் தலைமைக் காவலரை தாக்கியதாக தமிழக வெற்றிக் கழகத்தின் வழக்கறிஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர் ராஜேஷ் கைது செய்யப்பட்டுள்ளார். காவலர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸார் நடவடிக்கை மேற்கொண்ட நிலையில், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை நன்னிலம் கிளைச் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டது.
திருவாரூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜேஷ், தமிழக வெற்றிக் கழகத்தில் வழக்கறிஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளராக உள்ளார். நேற்று அவர் தனது இருசக்கர வாகனத்தில் திருவாரூர் நீதிமன்ற வளாகத்துக்கு சென்றுள்ளார். அப்போது போலீஸார் வாகனங்களை நிறுத்தும் இடத்திற்கு அருகே தனது மோட்டார் சைக்கிளை நிறுத்துவதற்காக சென்றதாக கூறப்படுகிறது.
அந்த பகுதியில் போலீஸ் வாகனத்தில் தலைமைக் காவலர் வினோத் அமர்ந்திருந்தார். அப்போது ஜிப் அருகே இறந்த நிலையில் கிடந்த நாயை அப்புறப்படுத்துமாறு ராஜேஷ், தலைமைக் காவலர் வினோத்திடம் கூறியுள்ளார். அதற்கு வினோத், “இது எனது வேலை இல்லை” என தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் அதிகரித்த நிலையில், அங்கு இருந்தவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதன் பின்னர் வழக்கறிஞர் ராஜேஷ், தலைமைக் காவலர் வினோத்தை பின்தொடர்ந்து சென்றதாக கூறப்படுகிறது. நீதிமன்ற வளாகத்துக்கு வெளியே வந்தபோது வினோத்தை ராஜேஷ் தாக்கியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக தலைமைக் காவலர் வினோத், திருவாரூர் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீஸார், வழக்கறிஞர் ராஜேஷ் (34) என்பவரை நேற்று இரவு கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட ராஜேஷை போலீஸார் நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து அவரை நன்னிலம் கிளைச் சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டது. அதன்படி, இன்று அதிகாலை ராஜேஷ் நன்னிலம் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.
வழக்கறிஞருக்கும், தலைமைக் காவலருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம் தொடர்ந்து தாக்குதல் சம்பவமாக மாறிய நிலையில், திருவாரூர் நீதிமன்ற வளாகம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சம்பவம் தொடர்பாக போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



