“இடம் மாறியது பரவாயில்லை; அதற்காக துதிபாட வேண்டியதில்லை” – ஓபிஎஸ்ஸுக்கு செங்கோட்டையன் பதிலடி
அதிமுகவில் இருந்து விலகிய முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தற்போது திமுகவிலும், செங்கோட்டையன் தவெகவிலும் இடம்பெற்றுள்ளனர். இந்நிலையில், சட்டப்பேரவையில் இன்று நடைபெற்ற விவாதத்தின்போது இருவரும் தங்களது சட்டைப்பையில் வைத்திருக்கும் தலைவர்களின் புகைப்படம் தொடர்பாக கருத்துகளை பரிமாறிக்கொண்டது அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது. இந்த விவாதத்தின்போது அமைச்சர்கள் ராஜ்மோகன் மற்றும் ஆதவ் அர்ஜுனாவும் செங்கோட்டையனுக்கு ஆதரவாக கருத்துகளை தெரிவித்தனர்.
தவெக தலைமையிலான அரசு கடந்த வாரம் தாக்கல் செய்த திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கை மீதான சட்டப்பேரவை விவாதத்தில் முன்னாள் முதல்வரும், திமுக சட்டப்பேரவை உறுப்பினருமான ஓ.பன்னீர்செல்வம் பங்கேற்று தனது கருத்துகளை முன்வைத்தார். அப்போது அவர் ஆட்சியின் செயல்பாடுகள் குறித்து விமர்சனங்களை தெரிவித்த நிலையில், அவை முன்னவரும் அமைச்சருமான செங்கோட்டையன் குறுக்கிட்டு பதிலளித்தார்.
செங்கோட்டையன் பேசுகையில், தமிழகமே பாராட்டி வரும் தூய்மையான ஆட்சியை ஏமாற்றத்தை ஏற்படுத்தும் ஆட்சி என ஓ.பன்னீர்செல்வம் குறிப்பிடுவது வேடிக்கையாக இருப்பதாக தெரிவித்தார். மேலும், “நீங்கள் இடம் மாறி இருக்கிறீர்கள், அது பரவாயில்லை. அதற்காக இவ்வளவு துதிபாட வேண்டிய அவசியமில்லை” என ஓபிஎஸ்ஸை விமர்சித்தார். இதற்கு பதிலளித்த ஓ.பன்னீர்செல்வம், “அந்த இடத்தை முதலில் மாற்றியவரே அவர்தான் என்பதை நான் இங்கு தெரிவித்துக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன்” என்று கூறினார்.
இதையடுத்து அமைச்சர் ராஜ்மோகன் விவாதத்தில் குறுக்கிட்டு, ஓ.பன்னீர்செல்வம் கூறிய கருத்துக்கு பதில் அளித்தார். செங்கோட்டையன் முதலில் இடம் மாறியபோதும், அவரது இதயத்திற்கு அருகில் இருந்த புகைப்படத்தை மட்டும் மாற்ற வேண்டாம் என்று தவெக தலைவர் மற்றும் முதல்வர் விஜய் கூறியதாக அவர் தெரிவித்தார். ஆனால், ஓபிஎஸ்ஸின் சட்டைப்பையை பார்க்கும்போது இடம் மட்டுமல்ல, இதயமும் மாறியிருக்கிறதோ என்ற தோற்றம் ஏற்படுவதாக ராஜ்மோகன் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன் கட்சி மாறி புதிய இடத்துக்கு சென்றிருந்தாலும், அவரது சட்டைப்பையில் இன்னும் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படமே இருப்பதாக கூறினார். “ஜெயலலிதாவால் முதல்வராக அமர்த்தப்பட்டவர், இன்று தனது சட்டைப்பையில் யாருடைய புகைப்படத்தை வைத்திருக்கிறார்?” என்றும் ஓ.பன்னீர்செல்வத்தை நோக்கி அவர் கேள்வி எழுப்பினார்.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் செங்கோட்டையனும் நீண்ட காலமாக அதிமுகவில் இணைந்து அரசியல் பயணம் மேற்கொண்டவர்கள். கடந்த தேர்தலுக்கு முன்னதாக இருவரும் அக்கட்சியில் இருந்து விலகினர். அதன்பின்னர் செங்கோட்டையன் தவெகவில் இணைந்து தேர்தலில் வெற்றி பெற்று அமைச்சராகியுள்ளார். ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்து தற்போது சட்டப்பேரவை உறுப்பினராக உள்ளார். இந்த நிலையில், சட்டப்பேரவையில் நடைபெற்ற இருவரது வார்த்தைப் போர் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் பெற்றுள்ளது.



