தேசிய சின்னங்களை அவமதிப்போருக்கு இந்தியாவில் இடமில்லை: உத்தர பிரதேச முதல்வர் யோகி கருத்து
தேசிய கீதம், தேசிய பாடல், தேசிய சின்னங்கள் மற்றும் தேசிய தலைவர்களை அவமதிப்பவர்கள் இந்தியாவில் வாழ முடியாது என்று உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். சுதந்திர தினத்தை முன்னிட்டு லக்னோவில் நடைபெற்ற மூவர்ணக் கொடி யாத்திரையில் கலந்து கொண்டு அவர் இதனைத் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் பேசிய யோகி ஆதித்யநாத், தேசிய பாடலான ‘வந்தே மாதரம்’ பாடலின் 150-வது ஆண்டு கொண்டாடப்பட்டு வருவதாக குறிப்பிட்டார். காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் சந்திரசேகர் ஆசாத், ராணி லட்சுமிபாய், உதா தேவி உள்ளிட்ட பல சுதந்திரப் போராட்டத் தலைவர்கள் உரிய முறையில் கவுரவிக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.
கடந்த 2014-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர், சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்ற அனைத்து தலைவர்களுக்கும் உரிய மரியாதை வழங்கப்பட்டதாகவும் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார். தற்போது 140 கோடி இந்தியர்களும் சுதந்திர தினத்தன்று தேசியக் கொடியை ஏற்றி மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், தேசிய கீதம், தேசிய பாடல், தேசிய சின்னங்கள் மற்றும் தேசிய தலைவர்களை அவமதிப்பவர்கள் இந்தியாவில் வாழ முடியாது என்று அவர் தெரிவித்தார். ‘வந்தே மாதரம்’ பாடலை அவமதிப்போருக்கு சிறைத் தண்டனை விதிக்கும் வகையிலான சட்டம் சமீபத்தில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் யோகி ஆதித்யநாத் கூறினார்.
இதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு மனதார நன்றி தெரிவிப்பதாகவும் அவர் கூறினார். அதேவேளை, இந்தியாவுக்கு எதிராக செயல்படுவதாகக் கூறப்படும் சிலர் தற்போது சமூக வலைதளங்களில் பொய்யான தகவல்களையும் வதந்திகளையும் பரப்பி வருவதாகவும் யோகி குற்றம்சாட்டினார்.
சமூகத்தில் நிலவும் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் அவர்கள் தீவிரமாக முயற்சி செய்து வருவதாகவும், இதுபோன்ற செயல்களை முறியடிக்க வேண்டும் என்றும் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் வலியுறுத்தினார்.



