தமிழக பாஜக 2024-ல் தவறவிட்ட கூட்டணியால் டெல்லியில் இன்று பெரும்பான்மைக்காக கதவை தட்டும் சூழல்: அர்ஜுனமூர்த்தி பேச்சு!
கடந்த 2024 மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் பாஜக தவறவிட்ட அரசியல் கூட்டணியால், இன்று டெல்லியில் பெரும்பான்மையை உறுதி செய்ய பிற கட்சிகளின் கதவைத் தட்டவேண்டிய நிலை தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஏற்பட்டுள்ளதாக பாஜக தன்னார்வத் தொண்டு நிறுவனப் பிரிவின் மாநில அமைப்பாளர் இரா.அர்ஜுனமூர்த்தி தெரிவித்துள்ளார்.
2024 தேர்தலில் திமுக கூட்டணி 46.97% வாக்குகள் பெற்று 39 தொகுதிகளையும் கைப்பற்றிய நிலையில், தனித்தனியாகப் போட்டியிட்ட அதிமுக கூட்டணி 23.05% வாக்குகளையும், பாஜக தலைமையிலான கூட்டணி 18.28% வாக்குகளையும் பெற்றன. தேர்தல் முன்பே அதிமுக – பாஜக கூட்டணி அமைந்திருந்தால், அக்கூட்டணியின் மொத்த வாக்கு வங்கி 41.33% ஆக உயர்ந்து, தருமபுரி, கோவை, சேலம் உட்பட குறைந்தபட்சம் 6 தொகுதிகளில் நேரடி வெற்றி சாத்தியமாகியிருக்கும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
குறிப்பாக கோவை தொகுதியில் பாஜக வேட்பாளர் அண்ணாமலை பெற்ற 4,50,132 வாக்குகளுடன் அதிமுக பெற்ற வாக்குகளையும் சேர்த்தால், அது திமுகவை விட ஒரு லட்சத்திற்கும் அதிகமாக இருந்திருக்கும். இந்த கூட்டணி அமைந்திருந்தால் தமிழகத்தில் இருந்து குறைந்தபட்சம் 15 தொகுதிகளைக் கைப்பற்றி, நாடாளுமன்றத்தில் வலுவான பிரதிநிதித்துவத்தை தேசிய ஜனநாயகக் கூட்டணிக்குக் கொண்டு சேர்த்திருக்க முடியும்.
பெண்கள் இடஒதுக்கீடு மற்றும் தொகுதி மறுவரையறை போன்ற முக்கிய தேசிய விவகாரங்களில் பெரும்பான்மை அவசியமான சூழலில், தமிழகத்தில் தவறவிட்ட இந்த அரசியல் வாய்ப்பு மாநில அளவோடு நில்லாமல் டெல்லி அரசியலிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அப்போது எடுத்த தவறான முடிவு ஒரு தேர்தலை மட்டுமல்லாது, ஒரு தலைமுறையின் அரசியல் திசையையே மாற்றிவிட்டதாக அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.



