பரந்தூரில் விமான நிலையம் அமைக்க முடியாது என்றால் மாற்று இடத்தை தேர்வு செய்யாதது ஏன்?: நயினார் நாகேந்திரன் கேள்வி!
சென்னை: பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க முடியாது என்று கூறும் தவெக அரசு, அதற்கான மாற்று இடத்தை இதுவரை தேர்வு செய்யாதது ஏன் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாகத் தனது எக்ஸ் (ட்விட்டர்) தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், தமிழகத்தில் கூடுதல் விமான நிலையம் அமைப்பதில் மாநில அரசு காட்டும் தாமதத்தைக் கடுமையாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.
அந்தப் பதிவில், “சமீபத்தில் வெளியான நிதி ஆயோக் திட்டக்குழு அறிக்கையில், தமிழகத்தின் இணையற்ற வளர்ச்சிக்கு விமான நிலையங்கள் மற்றும் கழிவுநீர் மேலாண்மை உள்ளிட்ட உள்கட்டமைப்பு திட்டங்களில் மாநில அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை விஜய் தலைமையிலான தமிழக அரசு தீவிரமாகக் கவனத்தில் கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், “தமிழகத்தில் புதிதாக ஒரு புதிய விமான நிலையம் அமைவதற்கு முட்டுக்கட்டை போடும் வகையில், ‘விமான ஓடுதளம் அமைக்கப் பரந்தூர் ஏற்ற இடம் இல்லை’ என தவெக-வின் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் சில வாரங்களுக்கு முன்பு கூறியிருந்தார். அதேநேரம், பரந்தூர் விமான நிலையத்திற்கு மாற்று இடம் வேண்டித் தமிழக அரசு சார்பில் இதுவரை எந்தவொரு கோரிக்கையும் மத்திய அரசிடம் வைக்கப்படவில்லை என மத்திய விமானப் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் நாடாளுமன்றத்திலேயே தெளிவாகத் தெரிவித்துள்ளார்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
“அப்படியென்றால், அமைச்சர் நிர்மல்குமார் எந்த ஆதாரத்தின் அடிப்படையில் பரந்தூரில் விமான நிலையம் அமைக்கக்கூடாது என்று கூறினார்? பரந்தூரில் அமைக்க முடியாது என்றால் இதுவரை மாற்று இடத்தை தேர்வு செய்யாதது ஏன்?” எனக் கேள்வி எழுப்பியுள்ள நயினார் நாகேந்திரன், நிதி ஆயோக் அறிக்கையின்படி தமிழகத்தின் வான்வழிப் போக்குவரத்தை மேம்படுத்தும் வகையில் புதிய விமான நிலையம் அமைக்கத் தவெக அரசு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.



