திருவள்ளூரில் சார்ஜர் வயரில் கசிந்த மின்சாரம் தாக்கி பிளஸ் 1 மாணவன் உயிரிழப்பு
திருவள்ளூரில் மடிகணினி சார்ஜர் வயரில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக பிளஸ் 1 மாணவன் உயிரிழந்த சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி விடுமுறை நாளில் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த மாணவர், சார்ஜர் வயரை எதிர்பாராதவிதமாக தொட்டபோது இந்த சோக சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.
திருவள்ளூர் பெரியகுப்பம் கற்குழாய் தெருவைச் சேர்ந்த செந்தில் பெயிண்டராக பணியாற்றி வருகிறார். இவரது மகன் சீனிவாசன் (17), திருவள்ளூர் அருகே மணவாளநகரில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். பள்ளிக்கு விடுமுறை என்பதால் நேற்று மதியம் சீனிவாசன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது, பக்கத்து வீட்டைச் சேர்ந்த சிறுவன் சீனிவாசனின் வீட்டில் மடிகணினிக்கு சார்ஜர் இணைத்ததாக கூறப்படுகிறது. உறக்கத்தில் இருந்த சீனிவாசன், சார்ஜர் இணைக்கப்பட்டிருந்ததை கவனிக்காமல் அதன் வயரை கையில் எடுத்துள்ளார். அப்போது சார்ஜர் வயரில் ஏற்பட்டிருந்த மின்கசிவு காரணமாக மின்சாரம் தாக்கி அவர் மயங்கியதாக தெரிகிறது.
இதையடுத்து, சீனிவாசனை குடும்பத்தினர் மற்றும் அருகில் இருந்தவர்கள் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அவரை பரிசோதித்த மருத்துவர்கள், மருத்துவமனைக்கு அழைத்து வரும் வழியிலேயே சீனிவாசன் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக திருவள்ளூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சார்ஜர் மற்றும் அதன் வயரில் ஏற்பட்ட மின்கசிவு குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி மாணவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.



