வேளாண் பட்ஜெட் 2026-27: உழவர் ஏஐ திட்டம் முதல் ‘துளி துளி தண்ணீர்’ வரை புதிய அறிவிப்புகள்
2026–27-ஆம் ஆண்டுக்கான தமிழக வேளாண் பட்ஜெட்டில், விவசாயத்தை நவீன தொழில்நுட்பத்துடன் இணைக்கும் பல்வேறு புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி விவசாயிகளுக்கு மண் வளம், பயிர் சாகுபடி, வானிலை உள்ளிட்ட தகவல்களை உடனுக்குடன் வழங்கும் ‘உழவர் செயற்கை நுண்ணறிவு (AI) திட்டம்’ ரூ.2 கோடி செலவில் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் மூலம், செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திரவழி கற்றல் தொழில்நுட்பங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு, விதைப்பு முதல் அறுவடை வரை தேவையான அனைத்து தொழில்நுட்ப ஆலோசனைகளும் வழங்கப்படும். வானிலை முன்னறிவிப்பு, மண் நலம், பூச்சி மற்றும் நோய் மேலாண்மை, பருவநிலைக்கு ஏற்ற பயிர் தேர்வு உள்ளிட்ட சேவைகளுடன், சந்தை நிலவரம், குரல் வழி வேளாண் சேவைகள் மற்றும் அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்த தகவல்களையும் விவசாயிகள் தங்களது கைபேசி மூலம் எளிதாக பெறும் வசதி ஏற்படுத்தப்படுகிறது.
வறட்சியைத் தாங்கக்கூடிய மற்றும் குறைந்த நீரில் அதிக ஊட்டச்சத்து தரும் சிறுதானியங்களின் சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில், 29 மாவட்டங்களில் ரூ.7.61 கோடி செலவில் ‘தமிழ்நாடு குறுதானிய இயக்கம்’ செயல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சாமை, தினை, வரகு, குதிரைவாலி, பனிவரகு உள்ளிட்ட சிறுதானியங்களின் சாகுபடி பரப்பளவை இருமடங்காக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், நீண்ட இழை பருத்தி மற்றும் ஊடுபயிர் சாகுபடியை மேம்படுத்தும் நோக்கில் ரூ.27.21 கோடி மதிப்பில் ஐந்தாண்டு கால ‘பருத்தி மறுமலர்ச்சி இயக்கம்’ 73,360 ஏக்கர் பரப்பில் செயல்படுத்தப்படும். இதன் மூலம் சுமார் 40 ஆயிரம் பருத்தி விவசாயிகள் பயனடைவார்கள். மேலும், அதிகரித்து வரும் மக்காச்சோள தேவையை பூர்த்தி செய்ய ரூ.36 கோடியில் ‘மக்காச்சோள உற்பத்தி மேம்பாட்டு திட்டம்’ 3.47 லட்சம் ஏக்கர் பரப்பில் செயல்படுத்தப்பட்டு, 1.39 லட்சம் விவசாயிகள் பயன்பெறுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீர் மேலாண்மைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில், ‘துளி துளி தண்ணீர்’ திட்டத்திற்காக ரூ.758 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மானியமும், மற்ற விவசாயிகளுக்கு 75 சதவீத மானியமும் வழங்கப்படும். இதன் மூலம் 2.23 லட்சம் ஏக்கர் பரப்பில் நுண்ணீர் பாசன வசதி ஏற்படுத்தப்பட்டு, சுமார் 95 ஆயிரம் விவசாயிகள் பயனடைவார்கள் என வேளாண் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.



