“திருமணமானவர் ‘லிவ்-இன்’ உறவில் இருந்தால் 5 ஆண்டு சிறை” – பொது சிவில் சட்ட மசோதாவுக்கு ம.பி. அமைச்சரவை ஒப்புதல்!
மத்திய பிரதேச மாநிலத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க பொது சிவில் சட்ட (UCC) மசோதாவுக்கு மாநில அமைச்சரவை முறைப்படி ஒப்புதல் அளித்துள்ளது. இச்சட்டத்தின் முக்கிய அம்சங்கள் மற்றும் கடுமையான விதிகள் குறித்து அம்மாநில முதல்வர் மோகன் யாதவ் விரிவான தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் மோகன் யாதவ் கூறியதாவது: “புதிய பொது சிவில் சட்டத்தின்படி, கணவன் அல்லது மனைவி உயிரோடு இருக்கும்போது ஒரு நபர் ஒரு திருமணத்திற்கு மட்டுமே அனுமதி உண்டு. விவாகரத்து என்பது இனி சட்டப்பூர்வ நடைமுறை மற்றும் நீதிமன்றத் தீர்ப்பு மூலமாக மட்டுமே செல்லுபடியாகும். தனிநபர் விருப்பங்களின்படி விவாகரத்து பெற முடியாது. மேலும், அனைத்துத் திருமணப் பதிவுகளும் கட்டாயமாக்கப்பட்டுள்ளன.”
’லிவ்-இன்’ உறவுகளுக்குக் கடுமையான கட்டுப்பாடுகள்:
திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழும் ‘லிவ்-இன்’ (Live-in Relationship) உறவில் இருக்கும் தம்பதிகள், தாங்கள் இணைந்து வாழத் தொடங்கிய ஒரு மாதத்திற்குள் தங்களைப் பதிவு செய்து கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதற்குத் திருமணத்திற்குரிய அதே வயது வரம்புகள் (ஆண்களுக்கு 21, பெண்களுக்கு 18) பொருந்தும்.
குறிப்பாக, ஏற்கனவே திருமணமான ஒரு நபர், தனது கணவன் அல்லது மனைவி உயிரோடு இருக்கும்போது மற்றொருவருடன் ‘லிவ்-இன்’ உறவில் ஈடுபட்டால், அது கடுமையான குற்றமாகக் கருதப்பட்டு, அவருக்கு 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க இச்சட்ட திருத்தம் வழிவகை செய்கிறது.
சொத்துரிமை மற்றும் பிற முக்கிய அம்சங்கள்:
- சம சொத்துரிமை: சொத்து மற்றும் வாரிசுரிமை விவகாரங்களில், இனி மகன்களுக்கு நிகராக மகள்களுக்கும் சம உரிமை உண்டு.
- பழங்குடியினருக்கு விலக்கு: பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் வாழும் பழங்குடியின மக்கள் மற்றும் குறிப்பாக பாதிக்கப்படக் கூடிய பழங்குடி குழுக்களின் (PVTGs) கலாச்சாரப் பின்னணியைக் கருத்தில் கொண்டு, அவர்களுக்கு இந்தச் சட்டத்திலிருந்து முழுமையாக விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
- அனைவருக்கும் சமத்துவம்: “எங்களைப் பொறுத்தவரை ராமச்சந்திரனாக இருந்தாலும் சரி, ரஹீமாக இருந்தாலும் சரி, சட்டத்தின் முன்னால் அனைவருக்கும் சமத்துவம் கிடைக்க வேண்டும்” என்று முதல்வர் மோகன் யாதவ் சுட்டிக்காட்டியுள்ளார்.
முஸ்லிம் சமூகத்தினரிடையே பலத்த ஆதரவு:
பொது சிவில் சட்டம் தொடர்பான ஆலோசனைக் கூட்டங்களின் போது, முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த மக்களிடையே இதற்குப் பலத்த ஆதரவு கிடைத்துள்ளதாக முதல்வர் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, சுமார் 80 சதவீத முஸ்லிம் பெண்களும், 40 சதவீத ஆண்களும் இந்தச் சட்டத்தை ஆதரித்துள்ளனர். இந்து மகள்களுக்குப் பாதுகாப்பு இருப்பது போல, தங்களின் சகோதரிகள் மற்றும் மகள்களுக்கும் சட்டப்பூர்வப் பாதுகாப்பு கிடைக்க வேண்டும் எனப் பல முஸ்லிம் சகோதரர்கள் வெளிப்படையாகவே இச்சட்டத்தை வரவேற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.



