செங்கோட்டை சுதந்திர தின விழாவை ராகுல் காந்தி, கார்கே தொடர்ந்து 2-வது ஆண்டாக புறக்கணிப்பு
டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும், காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக புறக்கணித்துள்ளனர். கடந்த ஆண்டைப் போலவே முன்வரிசையில் உரிய இடம் ஒதுக்கப்படாததே அவர்கள் விழாவில் பங்கேற்காததற்கான காரணம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 2024-ம் ஆண்டு டெல்லி செங்கோட்டையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கு வழக்கமாக ஒதுக்கப்படும் முதல் வரிசைக்கு பதிலாக 5-வது வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற குடியரசு தின விழாவில் அவருக்கு 3-வது வரிசையில் இருக்கை வழங்கப்பட்டது.
ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு முன்வரிசையில் இடம் வழங்குவதற்காகவே இருக்கை ஒதுக்கீட்டில் மாற்றம் செய்யப்பட்டதாக பாதுகாப்புத்துறை அமைச்சகம் விளக்கம் அளித்திருந்தது. எனினும், கேபினட் அமைச்சர் அந்தஸ்து மற்றும் முன்னுரிமை பட்டியலின்படி 7-வது இடத்தில் உள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவருக்கு உரிய மரியாதை வழங்கப்படவில்லை என்று காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.
தொடர்ந்து 2-வது ஆண்டாக புறக்கணிப்பு
இந்த நிலையில், டெல்லி செங்கோட்டையில் நேற்று நடைபெற்ற சுதந்திர தின விழாவிலும் ராகுல் காந்தியும் மல்லிகார்ஜுன கார்கேவும் பங்கேற்கவில்லை. கடந்த ஆண்டைப் போலவே முன்வரிசையில் இருக்கை ஒதுக்கப்படாததால் அவர்கள் விழாவை புறக்கணித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், எதிர்க்கட்சித் தலைவர்களின் விழா புறக்கணிப்பு அரசியல் வட்டாரத்தில் மீண்டும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, பாஜக செய்தித் தொடர்பாளர் பிரதீப் பண்டாரி, சுதந்திர தின விழாவில் பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரையில் இடம்பெற்ற ‘திமாகி நக்சல்’ என்ற கருத்தை சுட்டிக்காட்டி, விழாவில் பங்கேற்காத எதிர்க்கட்சித் தலைவர்களை கடுமையாக விமர்சித்துள்ளார்.
‘திமாகி நக்சல்’ குறித்து பிரதமர் கருத்து
சுதந்திர தின விழாவில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, காடுகளில் ஆயுதம் ஏந்திய நக்சல்களை ஒழிப்பதில் வெற்றி பெற்றுள்ளதாக தெரிவித்தார். அதேவேளையில், ‘திமாகி நக்சல்’ என குறிப்பிடப்படும் சிந்தனை சார்ந்த நக்சல்கள் வன்முறை மற்றும் அமைதியின்மையை உருவாக்குவதற்கான வாய்ப்புகளை தேடி வருவதாகவும் அவர் கூறினார்.
மேலும், இதுபோன்ற அறிவுசார் நக்சல்களை அடையாளம் கண்டு தனிமைப்படுத்த வேண்டும் என்றும் பிரதமர் தனது உரையில் குறிப்பிட்டார். இந்த கருத்தை மேற்கோள் காட்டிய பாஜக செய்தித் தொடர்பாளர் பிரதீப் பண்டாரி, சுதந்திர தின விழாவை எதிர்க்கட்சித் தலைவர்கள் புறக்கணித்திருப்பதை விமர்சித்துள்ளார்.



