பிரபல தங்க வர்த்தகர் பெயரில் ரூ.75 லட்சம் மோசடி: ராஜஸ்தானில் பதுங்கிய முக்கிய குற்றவாளி கைது
நாட்டின் பிரபல தங்க வர்த்தகரும், ஜெயின் சர்வதேச வர்த்தக அமைப்பின் தலைவருமான பிருத்விராஜ் கோத்தாரியின் பெயரைப் பயன்படுத்தி மோசடி கும்பல் ரூ.75 லட்சத்தை பறித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இணையத்தில் இருந்து பிருத்விராஜ் கோத்தாரி தொடர்பான தகவல்களை சேகரித்த மோசடி கும்பல், ஹைதராபாத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ரோஹித்குமார் ஜெயினை கடந்த ஜூலை 8-ம் தேதி தொடர்பு கொண்டதாக கூறப்படுகிறது.
தொலைபேசியில் பேசிய நபர், தான் பிருத்விராஜ் கோத்தாரி என அறிமுகப்படுத்திக் கொண்டு ரோஹித்குமாரை நம்ப வைத்துள்ளார். பின்னர் அவசரத் தேவைக்காக ஹைதராபாத்திலிருந்து அகமதாபாத்தின் கலுபூர் பகுதிக்கு பாரம்பரிய பணப் பரிமாற்ற முறையான ‘அங்காடியா’ மூலம் ரூ.75 லட்சத்தை அனுப்புமாறு கேட்டுள்ளார்.
இதனை உண்மை என நம்பிய ரோஹித்குமார், மறுநாளான ஜூலை 9-ம் தேதி ரூ.75 லட்சத்தை அனுப்பியுள்ளார். அகமதாபாத்தில் போலியான பெயரில் வந்த நபர் பணத்தை பெற்றுக்கொண்ட சில நிமிடங்களிலேயே, மோசடியில் தொடர்புடையவர்களின் செல்போன்கள் அனைத்தும் அணைக்கப்பட்டுள்ளன. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ரோஹித்குமார் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
அந்த புகார் அகமதாபாத் கலுபூர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, ‘பாரதிய நியாய சன்ஹிதா’ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து காவல்துறை துணை ஆணையர் ரூபல் சோலங்கி தலைமையிலான தனிப்படை, வழக்கில் தொடர்புடையவர்களை கண்டறியும் பணியில் தீவிரமாக ஈடுபட்டது.
விசாரணையின் ஒரு பகுதியாக சிசிடிவி காட்சிகள், செல்போன் எண்கள் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை காவல்துறையினர் ஆய்வு செய்தனர். அதன் அடிப்படையில் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் பதுங்கியிருந்ததாகக் கூறப்படும் முக்கிய குற்றவாளி மோத்சிங் (48) கைது செய்யப்பட்டார்.
மேலும், பணத்தை நேரடியாக பெற்றுக்கொண்டதாகக் கூறப்படும் குஜராத்தைச் சேர்ந்த பாரத்கிரி கோஸ்வாமி (32) என்பவரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மோத்சிங் மீது ஏற்கெனவே 26-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.



