உறவினருக்கு ஜாமீன் கிடைக்க நீதிபதி படத்துடன் மயானத்தில் மாந்திரீகம்: ஒருவர் கைது
சத்தீஸ்கரில் கத்திக்குத்து வழக்கில் சிக்கிய உறவினருக்கு ஜாமீன் கிடைக்க வேண்டும் என்பதற்காக, நீதிபதியின் புகைப்படத்தை வைத்து மயானத்தில் மாந்திரீக பூஜை நடத்தியதாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பிலாஸ்பூர் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற கத்திக்குத்து சம்பவம் தொடர்பான வழக்கில் பிரியான்ஷு போலே மற்றும் அவரது நண்பர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்த வழக்கில் ஒருவருக்கு ஏற்கெனவே ஜாமீன் கிடைத்த நிலையில், பிரியான்ஷு போலே தொடர்பான மனு உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்ததாக கூறப்படுகிறது.
இதனிடையே, பிரியான்ஷுவின் உறவினரான ரிஷிகேஷ் குமார், இணையத்தில் போலிச் சாமியார் ஒருவரின் வீடியோவை பார்த்ததாக கூறப்படுகிறது. மாந்திரீக பூஜை செய்தால் நீதிமன்றத்தில் ஜாமீன் கிடைக்கும் என அவர் நம்பியுள்ளார். இதையடுத்து தன்னுடன் இருந்த மேலும் மூவருடன் இணைந்து மயானத்தில் மாந்திரீக சடங்கு நடத்த அவர் திட்டமிட்டதாக தெரிகிறது.
அதன்படி, கடந்த வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமைக்கு இடைப்பட்ட நள்ளிரவில், சீபத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தேவாரி கிராமத்தில் உள்ள மயானத்துக்கு அவர்கள் சென்றுள்ளனர். அங்கு சத்தீஸ்கர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ரமேஷ் சின்ஹா, பிரியான்ஷு மற்றும் பாதிக்கப்பட்ட நபரின் புகைப்படங்களை வைத்து மாந்திரீக பூஜை நடத்தியதாக கூறப்படுகிறது.
மேலும், மீன், எலுமிச்சம்பழம் மற்றும் குங்குமம் உள்ளிட்ட பொருட்களை வைத்து அவர்கள் மாந்திரீக சடங்கில் ஈடுபட்டுள்ளனர். நள்ளிரவு நேரத்தில் மயானத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் சிலர் இருப்பதை கவனித்த கிராம மக்கள், அவர்களை தடுத்து விசாரித்துள்ளனர். அப்போது ரிஷிகேஷ் குமாருடன் வந்த மூவர் அங்கிருந்து தப்பியோடிய நிலையில், ரிஷிகேஷ் மட்டும் கிராம மக்களிடம் சிக்கிக் கொண்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் பிலாஸ்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரஜனேஷ் சிங் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். ரிஷிகேஷ் குமாரை கைது செய்த போலீஸார், மயானத்தில் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் மாந்திரீகப் பொருட்களையும் பறிமுதல் செய்தனர். தப்பியோடிய மற்ற மூவரையும் போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.



