போதைப்பொருள் கடத்த முயன்ற 7 பேர் கைது: சிறப்புப் படை 1,031 கிலோ ஓபியம் பறிமுதல்
ஹைதராபாத்தில் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்கவும், அதன் பின்னணியில் செயல்படுபவர்களை கண்டறியவும் சைபராபாத் மற்றும் மியாபூர் போலீஸார் இணைந்து ‘ஹைதராபாத் ஈகிள்’ என்ற சிறப்புப் படையை அமைத்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்த நடவடிக்கையின் மூலம் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான முக்கிய தகவல்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன.
போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், ராஜஸ்தானில் இருந்து பெங்களூரு வழியாக ஹைதராபாத்துக்கு போதைப்பொருட்கள் கடத்தி வரப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து நடத்தப்பட்ட சோதனை மற்றும் நடவடிக்கையில் 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 1,031 கிலோ ஓபியம் (அபின்-கருப்பு மருந்து) மற்றும் 25 கிராம் மெஃபெட்ரோன் (எம்.டி) ஆகிய போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மிகப்பெரிய அளவில் போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளதால், இந்தக் கடத்தல் தொடர்பாக போலீஸார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ராஜஸ்தானை மையமாகக் கொண்டு செயல்பட்டு வந்த இந்தக் கும்பல், கூரியர் சேவைகள், தனியார் பேருந்துகள், ரயில்கள், கார்கள் மற்றும் இடைத்தரகர்கள் உள்ளிட்ட பல்வேறு வழிகளைப் பயன்படுத்தி போதைப்பொருட்களை கடத்தி வந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. கடந்த 2023-ம் ஆண்டு முதல் இதுவரை 78 குழுக்கள் மூலம் ஹைதராபாத்துக்கு போதைப்பொருட்கள் கொண்டு வரப்பட்டு விநியோகிக்கப்பட்டதும் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும், ராஜஸ்தானைச் சேர்ந்த மகேந்தர் குமாவத் என்பவர் பெங்களூரு வழியாக ஹைதராபாத்துக்கு போதைப்பொருட்களை அனுப்பி வைத்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இதன் அடிப்படையில் கடத்தல் வலையமைப்பில் தொடர்புடையவர்களை கண்டறியும் பணியில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்த வழக்கில் ‘எம்.ஆர். டிராவல்ஸ்’ என்ற தனியார் பேருந்தின் ஓட்டுநர் ஒருவரையும் போலீஸார் கைது செய்துள்ளனர். போதைப்பொருட்கள் எந்தெந்த வழிகளில் கொண்டு செல்லப்பட்டன, இதில் மேலும் யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து சிறப்புப் படையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



