திருவொற்றியூரில் முன்விரோதம் காரணமாக பிளஸ் 2 மாணவர் கொலை: மாணவர்கள் கைது
திருவொற்றியூரில் மாணவர்களிடையே ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக பிளஸ் 2 மாணவர் ஒருவர் தாக்கிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக தாக்குதலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மாணவர்களை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்த பிளஸ் 2 மாணவருக்கும், அவரைவிட வயதில் மூத்த பிளஸ் 1 மாணவருக்கும் இடையே யார் சீனியர் என்பதில் ஏற்கெனவே தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், பிளஸ் 2 மாணவர் நேற்று பள்ளிக்கு வரவில்லை.
அவரது வகுப்பு நண்பரான திருவொற்றியூர் தனுஷ் (16), மாலை 4.15 மணியளவில் அதே பகுதியில் உள்ள அஜாக்ஸ் பேருந்து நிலையத்தின் பின்புறம் அமைந்துள்ள காலி மைதானத்தில் நின்றிருந்தார். இதனை அறிந்த பிளஸ் 1 மாணவர் தனது நண்பர்கள் 10-க்கும் மேற்பட்டோருடன் அங்கு சென்றதாக கூறப்படுகிறது.
அங்கு தனுஷை அந்த மாணவர்கள் சரமாரியாகத் தாக்கியதாகவும், இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த திருவொற்றியூர் போலீஸார், தாக்குதலில் தொடர்புடைய மாணவர்களை கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



