தொடர்ந்து 13-வது இரவாக ஈரான் மீது தாக்குதல்: அமெரிக்க ராணுவம் அதிகாரப்பூர்வ தகவல்!
மேற்காசியப் பகுதியில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே நீண்டகாலமாக நிலவி வரும் பதற்றம் மீண்டும் உச்சமடைந்து, போர்ச் சூழலாக மாறியுள்ளது. இதன் எதிரொலியாக, சர்வதேச ரீதியில் மிக முக்கியக் கடல் வணிகப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியில் சரக்கு மற்றும் கச்சா எண்ணெய் கப்பல்களின் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணத்தால் உலகளவில் கச்சா எண்ணெய் விலையும் திடீரென உயரத் தொடங்கியுள்ளது.
முன்னதாக எட்டப்பட்ட இடைக்காலப் போர் நிறுத்த உடன்பாட்டை மீறி, ஹார்முஸ் ஜலசந்தியில் சென்ற எண்ணெய்க் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாக அமெரிக்கா குற்றம்சாட்டியது. இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஈரானின் உள்கட்டமைப்புகள் மற்றும் ராணுவ மையங்களைக் குறிவைத்து அமெரிக்க ராணுவம் கடந்த சில வாரங்களாகத் தீவிர வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இந்நிலையில், ஈரானின் ராணுவத் தளங்களை இலக்காகக் கொண்டு தொடர்ந்து 13-வது இரவாக அமெரிக்க ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளதாக அந்நாட்டு ராணுவ மத்திய போர்க் கட்டளையகம் தெரிவித்துள்ளது. இந்திய நேரப்படி இன்று அதிகாலை இந்தத் தாக்குதல் நடைபெற்றுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தியில் சர்வதேச சரக்குக் கப்பல்களுக்கு அச்சுறுத்தலாக உள்ள ஈரானின் ‘இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை’யின் (IRGC) செயல்பாடுகளை முடக்கும் நோக்கிலேயே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், ஈரானியத் துறைமுகங்களில் இருந்து கப்பல்கள் சென்று வருவதைத் தடுத்துள்ளதாகவும் அமெரிக்கா கூறியுள்ளது.
இதனிடையே, “சேதமடையும் கப்பல்களுக்கு அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ள ஈரானின் நிதியைக் கொண்டே உரிய இழப்பீடு வழங்கப்படும்” என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தனது சமூக வலைதளப் பதிவில் தெரிவித்துள்ளார். மேலும், ஈரான் ஏவுகணை அல்லது ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தினால், அதற்கு இணையாக அந்நாட்டின் பாலம் மற்றும் மின் நிலையங்களை அழிப்போம் என்றும், ஈரான் அணுஆயுதம் பெறுவதை அமெரிக்கா ஒருபோதும் அனுமதிக்காது என்றும் அவர் எச்சரித்துள்ளார்.





