மகளிர் மசோதா தோல்வியைக் கொண்டாடிய திமுகவினரை வீட்டிற்கு அனுப்ப வேண்டும்: வானதி சீனிவாசன் காட்டம்!
திமுக அரசுக்கு வரவிருக்கும் தேர்தலில் பெண்கள் தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும் என கோவை வடக்கு தொகுதி பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன் வலியுறுத்தியுள்ளார். வடவள்ளி, மகாராணி அவென்யூ உள்ளிட்ட பகுதிகளில் சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்ட அவர், தமிழகத்தில் பெண்களுக்குப் பாதுகாப்பற்ற சூழல் நிலவுவதாகக் கவலை தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தில் பாஜக அரசு கொண்டு வந்த 33 சதவீத மகளிர் இடஒதுக்கீடு மசோதா தோல்வி அடைந்ததைக் கொண்டாடும் வகையில், திமுகவினர் பட்டாசு வெடித்து மகிழ்ந்ததாக அவர் கடுமையாகக் குற்றஞ்சாட்டினார். இத்தகைய பெண் விரோதப் போக்கைக் கொண்டிருப்பவர்களை மக்கள் நிராகரிக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். மேலும், கடந்த தேர்தல்களில் கோவையில் அனைத்துத் தொகுதிகளையும் தேசிய ஜனநாயகக் கூட்டணி வென்றதைப் போல, இந்த முறையும் மக்கள் தங்களுக்குப் பேராதரவு வழங்க வேண்டும் என வானதி சீனிவாசன் வேண்டுகோள் விடுத்தார்.




