TNPL 2026: திருச்சி அணியை வீழ்த்தி 2 விக்கெட் வித்தியாசத்தில் மதுரை பேந்தர்ஸ் வெற்றி
டிஎன்பிஎல் 2026 கிரிக்கெட் தொடரில் திண்டுக்கலில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் திருச்சி கிராண்ட் சோழாஸ் மற்றும் மதுரை பேந்தர்ஸ் அணிகள் மோதின. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் மதுரை பேந்தர்ஸ் அணி 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த திருச்சி கிராண்ட் சோழாஸ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்கள் இழப்புக்கு 173 ரன்கள் குவித்தது. அந்த அணியின் கேப்டன் சுரேஷ் குமார் சிறப்பாக விளையாடி 43 ரன்கள் சேர்த்தார். சஞ்ஜய் யாதவ் 37 ரன்களும், ராஜ் குமார் 35 ரன்களும் எடுத்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
மதுரை பேந்தர்ஸ் அணியின் பந்துவீச்சில் ராஜலிங்கம் சிறப்பாக செயல்பட்டு 3 விக்கெட்களை கைப்பற்றினார். இதையடுத்து 174 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மதுரை அணி களமிறங்கியது.
தொடக்கத்தில் சவாலான நிலை இருந்தாலும், மதுரை பேந்தர்ஸ் வீரர்கள் பொறுப்புடன் விளையாடி இலக்கை எட்டினர். அந்த அணி 19.4 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 174 ரன்கள் எடுத்து வெற்றியை பதிவு செய்தது.
மதுரை அணிக்காக கிரண் கார்த்திக்கேயன் 38 ரன்களும், சதுர்வேத் 27 ரன்களும், பாலசந்தர் அனிருத் 23 ரன்களும் சேர்த்தனர். இறுதிக்கட்டத்தில் சரவணன் அதிரடியாக விளையாடி 13 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 2 பவுண்டரிகளுடன் 26 ரன்கள் குவித்தார்.
அதேபோல், குர்ஜப்னீத் சிங் 9 பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் 3 பவுண்டரிகளுடன் 21 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார்.
2 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற மதுரை பேந்தர்ஸ் அணிக்கு 2 புள்ளிகள் வழங்கப்பட்டன. சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய குர்ஜப்னீத் சிங் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.



