தவெக அரசின் முதல் பட்ஜெட் நாளை தாக்கல்; பெண்கள், இளைஞர்கள் நலனுக்கு முக்கிய அறிவிப்புகள் எதிர்பார்ப்பு
முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசின் முதல் முழுமையான நிதிநிலை அறிக்கை நாளை சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்படுகிறது. 2026–27ஆம் நிதியாண்டுக்கான இந்த பொதுப் பட்ஜெட்டை நிதியமைச்சர் மரிய வில்சன் தாக்கல் செய்ய உள்ளார். தொடர்ந்து ஆகஸ்ட் 6ஆம் தேதி வேளாண் பட்ஜெட்டை வேளாண்துறை அமைச்சர் வினோத் தாக்கல் செய்யவுள்ளார். தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் என்பதால், மக்கள் நலன் மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை மையமாகக் கொண்ட பல முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2026 சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியை அமைத்த தவெக தலைவர் விஜய், கடந்த மே 10ஆம் தேதி முதலமைச்சராக பதவியேற்றார். அதனைத் தொடர்ந்து, புதிய அரசின் முதல் சட்டப்பேரவை கூட்டம் ஜூன் 19ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கியது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் ஜூன் 23ஆம் தேதி வரை நடைபெற்ற நிலையில், பின்னர் பேரவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து, ஆகஸ்ட் முதல் வாரத்தில் பட்ஜெட்டை தாக்கல் செய்ய அரசு முடிவு செய்து, கடந்த இரண்டு மாதங்களாக அதற்கான விரிவான பணிகளை மேற்கொண்டது.
பட்ஜெட்டில் இடம்பெறவுள்ள புதிய திட்டங்கள், ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள திட்டங்களின் முன்னேற்றம், துறைவாரியான தேவைகள் மற்றும் தேர்தல் அறிக்கையில் வழங்கப்பட்ட முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவது குறித்து முதல்வர் விஜய் தலைமையில் ஜூலை 2 முதல் 31ஆம் தேதி வரை தொடர் ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்றன. அதன் அடிப்படையில், பெண்கள் நலன், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு, கல்வி, விவசாயம் மற்றும் சமூகப் பாதுகாப்பு தொடர்பான பல புதிய திட்டங்கள் இந்த பட்ஜெட்டில் இடம்பெறலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறிப்பாக, மகளிர் உரிமைத் தொகை திட்டத்தில் மாற்றங்கள், பால் கொள்முதல் விலையை உயர்த்துவது, இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு திட்டங்கள், நீட் தேர்வு தொடர்பான சட்ட நடவடிக்கைகள் உள்ளிட்ட அம்சங்கள் குறித்து முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ‘வெற்றித் தமிழகம்’ என்ற ஐந்தாண்டு தொலைநோக்கு திட்டத்தின் கீழ் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.7,000 கோடி வட்டியில்லா கடன், கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வர மத்திய அரசை வலியுறுத்துதல், மாணவர்களுக்கு பிணையின்றி ரூ.20 லட்சம் வரை உயர்கல்விக் கடன் மற்றும் புதிய தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் அமைப்பது போன்ற அறிவிப்புகளும் இடம் பெறும் என கூறப்படுகிறது.
தவெக அரசின் முதல் பட்ஜெட் என்பதால், அரசின் எதிர்கால வளர்ச்சி நோக்கம், நிதி மேலாண்மை மற்றும் மக்கள் நலத் திட்டங்கள் குறித்த முக்கிய திசையை இந்த நிதிநிலை அறிக்கை வெளிப்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் மற்றும் பொருளாதார வட்டாரங்களில் நிலவுகிறது.



