தவெகவில் முன்னாள் அதிமுக எம்எல்ஏக்களுக்கு முக்கிய பொறுப்புகள்? 6 பேருக்கு மாநில அளவிலான பதவிகள் வழங்கப்படலாம் என தகவல்
அதிமுகவில் இருந்து எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து தமிழ்நாடு வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்த 6 முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கு மாநில அளவிலான முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட உள்ளதாக கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று நடைபெறவுள்ள கட்சி இணைப்பு நிகழ்ச்சியில் இந்த அறிவிப்பு வெளியாகலாம் என கூறப்படுகிறது.
பல்வேறு மாவட்டங்களில் இருந்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தவெகவில் இணைய உள்ள நிலையில், முன்னாள் எம்எல்ஏக்களான மரகதம் குமரவேல், ஜெயக்குமார், சத்யபாமா, இசக்கி சுப்பையா உள்ளிட்டோருக்கு மாநில அளவிலான பொறுப்புகள் வழங்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர்கள் அனைவரும் அதிமுகவில் இருந்து விலகி, அமைச்சர் ஆதவ் அர்ஜூனா முன்னிலையில் தவெகவில் இணைந்திருந்தனர். பின்னர் முன்னாள் அமைச்சர்களான எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் சி. விஜயபாஸ்கரும் தங்களது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து கட்சியில் இணைந்தனர்.
இதற்கிடையில், கட்சியில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் பலரும் இதுவரை தங்களுக்கு எந்தக் கட்சிப் பொறுப்பும் வழங்கப்படாததால் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. சிலர் மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட முக்கிய பதவிகளை எதிர்பார்த்து வந்த நிலையில், இதுகுறித்த தகவல்கள் கட்சித் தலைமையின் கவனத்திற்கும் சென்றதாக கூறப்படுகிறது.
அதையடுத்து, கட்சியின் தொடக்க கால நிர்வாகிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும், அனைவருக்கும் உரிய பொறுப்புகள் வழங்கப்படும் என்றும் முதல்வரும் தவெக தலைவருமான விஜய் உறுதியளித்ததாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன் தொடர்ச்சியாக முதற்கட்டமாக முன்னாள் அதிமுக எம்எல்ஏக்கள் 6 பேருக்கு மாநில அளவிலான பதவிகள் அறிவிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
மேலும், முன்னாள் அமைச்சர்களான கடம்பூர் ராஜூ, எம்.சி. சம்பத், உடுமலைப்பேட்டை ராதாகிருஷ்ணன், என்.ஆர். சிவபதி, வெல்லமண்டி நடராஜன், வளர்மதி மற்றும் எம்.எஸ்.எம். ஆனந்தன் ஆகியோருக்கும் அடுத்த கட்டத்தில் கட்சிப் பொறுப்புகள் வழங்கப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், இதுகுறித்து தவெக சார்பில் இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. இந்த தகவல்கள் கட்சி வட்டாரங்களில் வெளியாகியுள்ள தகவல்களின் அடிப்படையிலானவை.



