இன்ஸ்டாகிராம் ஃபாலோயர்களில் ராகுல் காந்தியை முந்திய முதல்வர் விஜய்; தேசிய அளவில் கவனம்
சமூக வலைதளங்களில் அரசியல் தலைவர்களின் செயல்பாடு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், இன்ஸ்டாகிராம் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியை முந்தி தமிழக முதல்வர் ஜோசப் விஜய் முன்னிலை பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதன் மூலம் டிஜிட்டல் தளங்களில் அவரின் செல்வாக்கு மேலும் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
சமீபத்தில் நடைபெற்ற நீட் தேர்வு வினாத்தாள் கசிவுக்கு எதிரான போராட்டங்களின்போது, இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மற்றும் வீடியோக்கள் லட்சக்கணக்கான பார்வைகளைப் பெற்று வைரலானது. இதனால் இளைஞர்களை விரைவாகச் சென்றடைய சமூக வலைதளங்கள் முக்கியமான தகவல் பரிமாற்ற தளமாக மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்ற பாகுபாடின்றி பல்வேறு அரசியல் தலைவர்கள் டிஜிட்டல் தளங்களில் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். இளைஞர்களை அதிகம் சென்றடைய இன்ஸ்டாகிராமை திறம்பட பயன்படுத்துமாறு பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்களுக்கும் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
இன்ஸ்டாகிராம் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்தவரை, பிரதமர் நரேந்திர மோடி 10.2 கோடி ஃபாலோயர்களுடன் தேசிய அளவில் முதலிடத்தில் உள்ளார். அவரைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் அமித் ஷா 3.22 கோடி பின்தொடர்பவர்களுடனும், நிதின் கட்கரி 66 லட்சம் ஃபாலோயர்களுடனும் முன்னணி இடங்களில் உள்ளனர்.
எதிர்க்கட்சித் தலைவர்களின் வரிசையில், ராகுல் காந்தியின் 1.47 கோடி ஃபாலோயர்களை விட அதிகமாக, தமிழக முதல்வர் ஜோசப் விஜய் 1.87 கோடி பின்தொடர்பவர்களுடன் முன்னிலை வகிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவரைத் தொடர்ந்து அசாதுதீன் ஒவைசி 1.25 கோடி ஃபாலோயர்களுடனும், அரவிந்த் கேஜ்ரிவால் மற்றும் பிரியங்கா காந்தி தலா 40 லட்சம் பின்தொடர்பவர்களுடனும் இடம்பெற்றுள்ளனர். சமூக வலைதளங்களில் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருவது இந்தப் பட்டியலின் மூலம் வெளிப்பட்டுள்ளது.



