மாநிலங்களின் கனிம வருவாய் அதிகாரத்தை பறிக்கும் சட்டத் திருத்தத்தை மத்திய அரசு திரும்பப் பெறுக: அன்புமணி
சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டத்தில் மேற்கொள்ளப்பட உள்ள திருத்தத்தை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த சட்டத் திருத்தம், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களின் வரி விதிக்கும் அதிகாரத்தையும் வருவாய் ஈட்டும் உரிமையையும் பாதிக்கும் வகையில் அமைந்துள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டத்தில் 9 டி என்ற புதிய பிரிவை சேர்க்கும் வகையில் சட்டத் திருத்த முன்வரைவு மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இந்தப் பிரிவு நடைமுறைக்கு வந்தால், கனிம வளங்களின் உரிமை மீது மாநில அரசுகள் தன்னிச்சையாக வரி, கூடுதல் வரி அல்லது தீர்வை விதிக்க முடியாத நிலை ஏற்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், மாநில அரசுகள் ஏற்கெனவே விதித்துள்ள இதுபோன்ற வரிகளை கனிமச் சுரங்க ஒப்பந்ததாரர்கள் செலுத்தாமல் நிலுவையில் வைத்திருந்தால், புதிய சட்டத் திருத்தம் அமலுக்கு வந்த பின்னர் அந்த நிலுவைத் தொகையையும் செலுத்த வேண்டிய அவசியம் இல்லாத சூழல் உருவாகலாம் என அன்புமணி தெரிவித்துள்ளார். கனிமங்களும் அவை அமைந்துள்ள நிலங்களும் மாநிலப் பட்டியலில் இடம்பெற்றுள்ள நிலையில், மத்திய அரசின் கட்டுப்பாடுகள் மற்றும் வழிகாட்டுதல்களுக்கு உட்பட்டே மாநிலங்கள் வரி விதிக்க வேண்டும் என்ற நிலையை இந்த சட்டத் திருத்தம் உருவாக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
மாநில அரசுகளின் வரி விதித்து வருவாய் ஈட்டும் அதிகாரத்தை இந்த சட்டத் திருத்தம் பாதிக்கும் என்றும் அன்புமணி தெரிவித்துள்ளார். குறிப்பாக தமிழ்நாட்டுக்கு கணிசமான வருவாய் இழப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 2025-26-ம் ஆண்டில் கனிம வளங்கள் மீதான வரி, ராயல்டி உள்ளிட்ட வழிகளில் தமிழக அரசு ரூ.4,100 கோடி வருவாய் ஈட்டியுள்ளதாகவும், 2026-27-ம் ஆண்டில் இதனை ரூ.11 ஆயிரம் கோடியாக உயர்த்த இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டின் கனிம வளங்களை முறையாகப் பயன்படுத்தினால் ஆண்டுக்கு ரூ.1.50 லட்சம் கோடி வரை வருவாய் ஈட்ட முடியும் என்பது பாமகவின் நிலைப்பாடு எனவும் அன்புமணி தெரிவித்துள்ளார். எந்தெந்த வழிகளில் இந்த வருவாயை உருவாக்க முடியும் என்பது தொடர்பாக பாமக ஒவ்வொரு ஆண்டும் வெளியிடும் நிழல் நிதிநிலை அறிக்கைகளில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
2017-ம் ஆண்டு சரக்குகள் மற்றும் சேவை வரி சட்டம் அமலுக்கு வந்த பின்னர், மாநில அரசுகளின் பல்வேறு வரி விதிக்கும் அதிகாரங்கள் குறைந்துவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது மதிப்புக் கூட்டு வரி, மோட்டார் வாகன வரி, பத்திரப் பதிவுக்கான முத்திரைத் தீர்வை மற்றும் கனிமங்கள் மீதான வரிகள் போன்றவற்றின் மூலமே மாநில அரசுகள் தங்களது வருவாயை திரட்ட வேண்டிய நிலை உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், கனிமங்கள் மீதான வரி விதிக்கும் அதிகாரத்தையும் கட்டுப்படுத்தும் வகையில் மத்திய அரசு சட்டத் திருத்தம் கொண்டுவந்தால், மாநிலங்களின் வருவாய் ஆதாரங்கள் மேலும் பாதிக்கப்படும் என்றும், இதனால் பொதுமக்களுக்கான பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் சிக்கல் ஏற்படும் என்றும் அன்புமணி தெரிவித்துள்ளார். இந்த சட்டத் திருத்தத்தால் தமிழ்நாடு குறிப்பாக கடுமையாக பாதிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் மிகப்பெரிய அளவில் கனிமவளக் கொள்ளை நடைபெற்றதாகவும், அது தொடர்பாக பாமக தொடர்ந்து பல்வேறு புகார்களை முன்வைத்து வந்ததாகவும் அன்புமணி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இதையடுத்து கனிமவள முறைகேடுகள் தொடர்பாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு, பல்வேறு வரிகள் மற்றும் அபராதங்கள் விதிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆனால், அவற்றை தவணை முறையில் செலுத்துவதற்கு வழங்கப்பட்ட சலுகை காரணமாக பெரும்பாலான தொகைகள் இன்னும் வசூலிக்கப்படவில்லை என்றும் கூறியுள்ளார்.
இந்த நிலையில் புதிய கனிமச் சட்டத் திருத்தம் அமலுக்கு வந்தால், கனிமவள முறைகேடுகளில் ஈடுபட்டவர்களிடம் இருந்து தமிழக அரசுக்கு கிடைக்க வேண்டிய வருவாய் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதாகவும் அன்புமணி எச்சரித்துள்ளார். இதனால் ஏற்கெனவே நிலுவையில் உள்ள வரி மற்றும் அபராதத் தொகைகளை வசூலிப்பதிலும் சிக்கல் ஏற்படக்கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.
கனிமங்களை தாங்கி நிற்கும் நிலங்கள் மீது வரி விதிக்கும் அதிகாரம் யாருக்கு என்பது தொடர்பான வழக்கில், கடந்த 2024-ம் ஆண்டு ஜூலை 25-ம் தேதி 9 நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அரசியல் சட்ட அமர்வு தீர்ப்பு வழங்கியதை அன்புமணி சுட்டிக்காட்டியுள்ளார். கனிமங்கள் மீது வரி விதிக்கும் அதிகாரம் மாநில அரசுகளுக்கே இருப்பதாக அந்த தீர்ப்பு தெரிவித்த நிலையில், அதன் முக்கியத்துவத்தை நீர்த்துப்போகச் செய்யும் வகையிலேயே தற்போதைய சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
மத்திய அரசு கொண்டுவரும் சட்டத் திருத்தங்கள் நிர்வாகச் சீர்திருத்தங்களை நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டுமே தவிர, மாநில அரசுகளின் அரசியலமைப்புச் சட்ட உரிமைகளையும் வருவாய் ஆதாரங்களையும் பறிக்கும் வகையில் இருக்கக் கூடாது என அன்புமணி வலியுறுத்தியுள்ளார். எனவே, மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டத் திருத்த முன்வரைவைக் மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.



