யூனியன் பிரதேசங்களை பலப்படுத்துவதே மோடி அரசின் தொலைநோக்கு பார்வை: அமித் ஷா பேச்சு
யூனியன் பிரதேசங்களை வலுப்படுத்துவதுதான் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் 12 ஆண்டுகால தொலைநோக்கு பார்வை என்றும், புதுச்சேரியின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்துக்கு மத்திய அரசு தொடர்ந்து உறுதுணையாக இருக்கும் என்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். புதுச்சேரி காவல்துறைக்கு குடியரசுத் தலைவரின் வண்ணக்கொடி விருது வழங்கும் விழாவில் அவர் இவ்வாறு பேசினார்.
புதுச்சேரிக்கு 2 நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று இரவு திருவண்ணாமலையில் இருந்து கார் மூலம் வந்தார். புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகையில் இரவு தங்கிய அவர், இன்று ஞாயிற்றுக்கிழமை காலை கோரிமேடு காவலர் மைதானத்தில் நடைபெற்ற விழாவில் பங்கேற்று, புதுச்சேரி காவல்துறைக்கு குடியரசுத் தலைவரின் வண்ணக்கொடி விருதை வழங்கினார். நிகழ்ச்சியில் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி, தற்காலிக பேரவைத்தலைவர் அன்பழகன், அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ், ராஜவேலு, சிவகொழுந்து, ராஜசேகர் உள்ளிட்டோர் மற்றும் எம்எல்ஏக்கள், அதிகாரிகள் பங்கேற்றனர்.
விழா நடைபெற்ற அரங்கில் 3 அடுக்குப் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சோதனைக்கு பின்னரே அனைவரும் நிகழ்ச்சிக்குள் அனுமதிக்கப்பட்டனர். புதுச்சேரி காவல்துறையின் பேண்ட் குழுவினர் அணிவகுப்பு இசை மற்றும் தேசிய கீதத்தை இசைத்தனர். பாதுகாப்பு கட்டுப்பாடுகள் காரணமாக பார்வையாளர்கள் குறைந்த அளவிலேயே விழா அரங்குக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
விழாவில் பேசிய அமித் ஷா, நாட்டில் வெகு சில மாநிலங்களுக்கே குடியரசுத் தலைவரின் வண்ணக்கொடி கவுரவம் வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். 4 பிராந்தியங்களாக பிரிந்துள்ள புதுச்சேரியில் காவல்துறை சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் கடின உழைப்பையும் அர்ப்பணிப்பையும் வெளிப்படுத்தி வருவதாக அவர் பாராட்டினார். குடியரசுத் தலைவரின் வண்ணக்கொடி சாதாரண விருது அல்ல என்றும், மிகுந்த பெருமையை அளிக்கக்கூடிய கவுரவம் என்றும் அவர் தெரிவித்தார்.
புதுச்சேரி காவல்துறையில் சுமார் 5 ஆயிரம் பேர் மட்டுமே பணியாற்றினாலும், இப்பகுதியின் ஆன்மிகம், பாரம்பரியம் மற்றும் மரபுகளுடன் சட்டம் ஒழுங்கையும் சிறப்பாக பராமரித்து வருவதாக அமித் ஷா கூறினார். காவல்துறையினரின் வீரம், தீரம் மற்றும் அர்ப்பணிப்பை அங்கீகரிக்கும் வகையிலேயே குடியரசுத் தலைவரின் வண்ணக்கொடி விருது வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
யூனியன் பிரதேசங்கள் பலப்படுத்தப்பட வேண்டும் என்பதே பிரதமர் மோடியின் 12 ஆண்டுகால தொலைநோக்கு பார்வை என தெரிவித்த அமித் ஷா, புதுச்சேரியில் மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறினார். ரூ.2,500 கோடி மதிப்பில் சாலை விரிவாக்கப் பணிகளும், ரூ.2,200 கோடி செலவில் காரைக்கால் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத் திட்டமும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், புதுச்சேரி விமான நிலையம் 34 மீட்டர் அளவுக்கு விரிவுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
1950 முதல் 2014-ம் ஆண்டு வரை புதுச்சேரிக்கு ரூ.35 ஆயிரம் கோடி மட்டுமே வழங்கப்பட்டதாகவும், 2014 முதல் 2026 வரை பிரதமர் மோடி தலைமையிலான அரசு ரூ.13,762 கோடியை வழங்கியுள்ளதாகவும் அமித் ஷா தெரிவித்தார். 12 ஆண்டுகளில் புதுச்சேரிக்கு வழங்கப்பட்ட நிதி 4 மடங்கு அதிகரித்துள்ளதாகவும், கடந்த 9 ஆண்டுகளில் ரூ.39 ஆயிரம் கோடி மதிப்பிலான நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மத்திய அரசின் பல்வேறு திட்டங்களின் வாயிலாக புதுச்சேரியில் 7.7 லட்சம் மக்கள் பயனடைந்துள்ளதாகவும் அமித் ஷா தெரிவித்தார். புதுச்சேரியின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்துக்கு பிரதமர் மோடி தலைமையிலான அரசு தொடர்ந்து தோளோடு தோள் நின்று ஆதரவளிக்கும் என உறுதியளித்த அவர், டிஜிபி முதல் கான்ஸ்டபிள் வரை குடியரசுத் தலைவரின் வண்ணக்கொடி விருதைப் பெற்றுள்ள புதுச்சேரி காவல்துறையினருக்கு வாழ்த்துகளையும் தெரிவித்தார்.
அணிவகுப்பில் போலீஸார் மயங்கி விழுந்த சம்பவம்
இதற்கிடையே, அமித் ஷா பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில் 100-க்கும் மேற்பட்ட ஆண், பெண் போலீஸார் அணிவகுப்பில் பங்கேற்றனர். இதற்காக அவர்கள் காலை 6 மணிக்கே வரவழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. விழா நிறைவடையும் வரை, அதாவது காலை 10 மணி வரை, அவர்கள் தொடர்ந்து வெயிலில் நிற்க வேண்டிய சூழல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு விருந்தினர்களின் உரைகள் மற்றும் விருது வழங்கும் நிகழ்ச்சி முடியும் வரை சுமார் 4 மணி நேரம் வெயிலில் தொடர்ந்து நின்றதால், மைதானத்தில் இருந்த ஆண் மற்றும் பெண் போலீஸாரில் பலர் திடீரென மயங்கி விழுந்தனர். இதையடுத்து மயங்கிய போலீஸாருக்கு முதலுதவி அளிப்பதற்காக ஸ்ட்ரெச்சர் மூலம் அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்.



