டெல்டா விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்படாததால் டெல்டா மாவட்டங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் கருகி விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார். இந்த நிலையில், பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் நஷ்டஈடு வழங்க தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ஆம் தேதி குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து காவிரி நீர் திறந்துவிடப்படும் என்றும், ஆனால் இந்த ஆண்டு அது நடைபெறாததால் டெல்டா மாவட்டங்களில் சுமார் 1.85 லட்சம் ஏக்கர் ஆற்றுப் பாசன நிலங்களில் குறுவை சாகுபடி மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால் விவசாயிகள் பெரும் பொருளாதார இழப்பை சந்தித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
காவிரி நீர் கிடைக்காததால், பல விவசாயிகள் கிணறு மற்றும் ஆழ்துளைக் கிணறுகளின் உதவியுடன் அதிக செலவில் குறுவை சாகுபடியை மேற்கொண்டதாக பழனிசாமி கூறியுள்ளார். ஒரு ஏக்கர் நெற்பயிர் சாகுபடிக்கு சுமார் ரூ.25 ஆயிரம் வரை செலவாகியிருப்பதாகவும், தற்போது தண்ணீர் பற்றாக்குறையால் திருவாரூர் மாவட்டம் நன்னிலம், குடவாசல் உள்ளிட்ட டெல்டா பகுதிகளில் சுமார் ஒரு லட்சம் ஏக்கரில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் கருகி விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த பாதிப்பை கருத்தில் கொண்டு, வருவாய்த் துறை மற்றும் வேளாண்துறை அதிகாரிகளை உடனடியாக டெல்டா மாவட்டங்களுக்கு அனுப்பி, சேதமடைந்த விவசாய நிலங்களை நேரில் ஆய்வு செய்ய வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார். ஆய்வின் அடிப்படையில், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் நஷ்டஈடு வழங்கி அவர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், தற்போது எஞ்சியுள்ள நெற்பயிர்களை காப்பாற்றும் வகையில், விவசாயத்திற்குத் தேவையான மும்முனை இலவச மின்சாரத்தை 24 மணி நேரமும் தடையின்றி வழங்க அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.



