மாமல்லன் நீர்த்தேக்கத் திட்டத்தை உடனே கைவிட வேண்டும்; மீனவர்கள், சுற்றுச்சூழலை காக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – அன்புமணி ராமதாஸ்
மாமல்லன் நீர்த்தேக்கத் திட்டம் சென்னை கிழக்குக் கடற்கரைப் பகுதியில் வாழும் ஆயிரக்கணக்கான மீனவர் குடும்பங்களின் வாழ்வாதாரத்தையும், சுற்றுச்சூழலையும் கடுமையாக பாதிக்கும் என்பதால், அந்தத் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் விரிவாகக் குறிப்பிட்டுள்ளார்.
அவரது அறிக்கையில், கானத்தூர் ரெட்டிக்குப்பம் முதல் கொக்கிலிமேடு வரை உள்ள உப்பங்கழி மற்றும் கழிவெளிப் பகுதிகளை அழித்து 5,161 ஏக்கர் பரப்பளவில் மாமல்லன் நீர்த்தேக்கம் அமைக்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இந்தப் பகுதி கடல் நீரும் நன்னீரும் சங்கமிக்கும் இயற்கை வளமிக்க சூழல் என்பதால், அரிய வகை மீன்கள், நண்டுகள், இறால்கள் இனப்பெருக்கம் செய்யும் முக்கிய வாழிடமாகவும், ஆயிரக்கணக்கான வெளிநாட்டு பறவைகள் வலசை வரும் உயிரியல் வளமிக்க பகுதியாகவும் விளங்குகிறது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டால் கானத்தூர் ரெட்டிக்குப்பம், கோவளம், நெம்மேலி, பட்டிப்புலம், தேவனேரி, மாமல்லபுரம், கொக்கிலிமேடு உள்ளிட்ட பகுதிகளில் வாழும் சுமார் 5,000 மீனவர் குடும்பங்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழக்கும் அபாயம் இருப்பதாக அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். அதேபோல், உப்பங்கழிகள் இயற்கையான கடல் பாதுகாப்பு அரண்களாக செயல்பட்டு வரும் நிலையில், அவற்றை அழிப்பதால் கடல் சீற்றம் மற்றும் புயல் காலங்களில் கடல்நீர் உள்புகும் அபாயம் அதிகரிக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய புதிய நீர்த்தேக்கங்கள் அவசியம் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்றும், ஆனால் இயற்கை வழங்கிய சதுப்புநிலங்கள் மற்றும் கழிவெளிகளை அழித்து நீர்த்தேக்கங்களை அமைப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அவர் கூறியுள்ளார். இயற்கை வளங்களைப் பாதுகாப்பதுடன், மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் உறுதிப்படுத்தும் வகையில் மாமல்லன் நீர்த்தேக்கத் திட்டத்தை அரசு முழுமையாக கைவிட வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.



