மேகேதாட்டு அணை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தை நாட வேண்டும்: தமிழக அரசுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
மேகேதாட்டு அணை விவகாரத்தில் மத்திய அரசு மற்றும் கர்நாடக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளை உரிய ஆதாரங்களுடன் உச்ச நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று, அணைக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிக்கு தடை பெற வேண்டும் என்று தமிழக அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரியில் தமிழகத்துக்கு உரிய நீரைப் பெறுவதற்காக உச்ச நீதிமன்றத்தை அணுக தமிழக அரசு முடிவு செய்திருப்பது சரியான நடவடிக்கை என்றும், ஆனால் இந்த முடிவு தாமதமாக எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். கர்நாடக அரசுடன் நடைபெற இருந்த இருதரப்பு பேச்சுவார்த்தை கைவிடப்பட்டதைத் தொடர்ந்து, சட்ட ரீதியான நடவடிக்கையே சரியான வழி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
காவிரி நீர் பகிர்வு மற்றும் மேகேதாட்டு அணை விவகாரம் தொடர்பாக கர்நாடக முதல்வர் டி.கே. சிவக்குமாரை தமிழக முதல்வர் விஜய் சந்தித்து பேச திட்டமிட்டிருந்ததாகவும், அதற்கு தமிழகத்திலும் கர்நாடகத்திலும் எதிர்ப்பு எழுந்த நிலையில் அந்த சந்திப்பு ரத்து செய்யப்பட்டதாகவும் அன்புமணி தெரிவித்துள்ளார்.
காவிரி நீரை திறக்க மறுக்கும் விவகாரமாக இருந்தாலும், மேகேதாட்டு அணை கட்டும் முயற்சியாக இருந்தாலும், சட்டத்தின் மூலம் எதிர்கொள்வதே சரியான அணுகுமுறை என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், காவிரி விவகாரத்தில் இனி கர்நாடக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துவதில்லை என்ற கொள்கை முடிவை தமிழக அரசு எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
கர்நாடகத்தில் எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் தமிழகத்துக்கு உரிய நீரை வழங்குவதில் அம்மாநில அரசுகள் தயக்கம் காட்டிய வரலாறு உள்ளதாக குறிப்பிட்ட அன்புமணி, காவிரி நீர் விவகாரத்தில் தமிழக அரசு அரசியல் ரீதியான அணுகுமுறையை தவிர்த்து சட்ட ரீதியான போராட்டத்தை தீவிரப்படுத்த வேண்டும் என்றார்.
மேலும், கடந்த காலங்களில் உச்ச நீதிமன்ற உத்தரவுகளுக்குப் பிறகும் காவிரி நீரை திறக்க கர்நாடகம் மறுத்த சம்பவங்களை சுட்டிக்காட்டிய அவர், நீதிமன்ற உத்தரவுகள் மூலமே பல நேரங்களில் தமிழகத்துக்கு நீர் கிடைத்ததாக தெரிவித்துள்ளார்.
எனவே, காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவின்படி தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரை உடனடியாக திறக்க உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் விரைந்து வழக்கு தொடர வேண்டும் என்றும், அதேபோல் மேகேதாட்டு அணைக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் நடவடிக்கைக்கு தடை விதிக்க நீதிமன்றத்தை நாட வேண்டும் என்றும் தமிழக அரசை அன்புமணி ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.



