ஆவின் பாலில் ரசாயன நெடி, மாவுக்கலப்படம் – உயர்மட்ட குழு அமைத்து விசாரிக்க நயினார் வலியுறுத்தல்
ஆவின் பாலில் வரும் ரசாயன நெடி மற்றும் சேத்தியாதோப்பு மாவுக்கலப்பட முறைகேடு ஆகிய இரண்டு விவகாரங்கள் குறித்தும் உடனடியாக உயர்மட்டக் குழு அமைத்து அரசு விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பதிவில், “தமிழகத்தில் ஆவின் பால் விநியோகம் தொடர்பாக பொதுமக்களும் பால் உற்பத்தியாளர்கள் சங்க உறுப்பினர்களும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருவது பெரும் அதிர்ச்சியளிக்கிறது.
ஒருபுறம் ஆவின் பால் பாக்கெட்டுகளில் பிளாஸ்டிக், குளோரின் மற்றும் மருந்து நெடி வீசுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டும் நிலையில், மறுபுறம் கடலூர் சேத்தியாதோப்பில் பாலில் மரவள்ளிக்கிழங்கு மாவு, அகர் அகர் போன்ற ரசாயனங்களை கலந்து கலப்படம் செய்வதாக பால் உற்பத்தியாளர்கள் சங்க உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மக்களின் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் இத்தகைய ரசாயன கலப்படங்களை அனுமதிப்பதும், முறைகேடுகளை தட்டிக்கேட்பவர்களை கண்டுகொள்ளாமல் அலட்சியப்படுத்துவதும் தற்போதைய தவெக அரசின் நிர்வாக சீர்கேட்டை படம் பிடித்து காட்டுகிறது. மேலும் முறையான தரக்கட்டுப்பாட்டு சோதனைகள் ஏதுமின்றி தினமும் ஆயிரக்கணக்கான லிட்டர் பாலை கொள்முதல் செய்வது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
எனவே ஆவின் பாலில் வரும் ரசாயன நெடி மற்றும் சேத்தியாதோப்பு மாவுக்கலப்பட முறைகேடு ஆகிய இரண்டு விவகாரங்கள் குறித்தும் உடனடியாக உயர்மட்ட குழு அமைத்து அரசு விசாரணை நடத்த வேண்டும். மக்களின் உடல்நலத்தோடு விளையாடும் ஆவின் அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுத்து, தூய்மையான ஆவின் பால் விநியோகத்தை அரசு உறுதி செய்ய வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.



