மேகேதாட்டு அணைக்கு எதிராக ராகுல் குரல் கொடுத்தால் பாஜக கூட்டணியில் இருந்து விலகுவோம் – அன்புமணி
மேகேதாட்டு அணை கட்டக்கூடாது என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அறிவித்தால், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேற தயாராக உள்ளதாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அதிரடியாக தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “தமிழக முதல்வர் கர்நாடகா சென்று அம்மாநில முதல்வரை சந்தித்து, மேகேதாட்டு அணை கட்டும் இடத்தை பார்வையிடுவது தமிழகத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். கர்நாடகா அணையை கட்டவே கூடாது என்று நாம் வலியுறுத்தி வரும் நிலையில், அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்துவதில் எந்த பயனும் இல்லை. இது தவறான அணுகுமுறை” என்று குற்றம்சாட்டினார்.
மேலும் பேசிய அவர், “இது தொடர்பான பேச்சுவார்த்தை மத்திய அரசிடமும், பிரதமர் மோடியிடமும் தான் நடத்தப்பட வேண்டும். கர்நாடக விவகாரத்தை அம்மாநில அரசு வேறு விதமாக திசை திருப்புகிறது. இதில் மத்தியில் ஆளும் பாஜகவும், கர்நாடகத்தை ஆளும் காங்கிரஸும் கூட்டு சதி செய்கின்றன. இந்த சூழ்ச்சியில் தமிழக முதல்வர் சிக்கிவிடக் கூடாது. தமிழகத்தின் அனுமதியின்றியே அணை கட்டலாம் என 2018-ல் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதாக நாடாளுமன்றத்தில் மத்திய அமைச்சர் கூறியது முற்றிலும் தவறு” என்றார்.
தொடர்ந்து பேசிய அன்புமணி, “அந்தமான் நிக்கோபார் தீவுகளில் காடுகளை அழித்து கிரேட் நிக்கோபார் திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என ராகுல் காந்தி எதிர்ப்பு தெரிவிக்கிறார். அதேபோல் 12,500 ஏக்கர் வனப்பகுதியை அழித்து கட்டப்படவுள்ள மேகேதாட்டு அணைக்கு எதிராக பேச ராகுல் காந்திக்கு துணிச்சல் உண்டா? தமிழக காங்கிரஸ் தலைவருக்காவது அந்த தைரியம் இருக்கிறதா? கர்நாடக அரசு மேகேதாட்டு அணை கட்டக்கூடாது என ராகுல் காந்தி ஒரு வார்த்தை சொன்னால் கூட, நாங்கள் உடனடியாக என்டிஏ கூட்டணியில் இருந்து விலக தயார்” என்று சவால் விடுத்தார்.



