ஐஐடி இயக்குநர் காமகோடி குறித்த பிரியங்கா காந்தி கருத்துக்கு 215-க்கும் மேற்பட்ட கல்வியாளர்கள் கண்டனம்
மக்களவையில் சென்னை ஐஐடி இயக்குநர் வி.காமகோடி குறித்து காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, நாடு முழுவதிலுமிருந்து 215-க்கும் மேற்பட்ட பல்கலைக்கழக துணைவேந்தர்கள், முன்னாள் துணைவேந்தர்கள் மற்றும் கல்வியாளர்கள் இணைந்து கண்டனக் கடிதம் வெளியிட்டுள்ளனர். நாடாளுமன்ற விவாதங்களில் தனிநபர்களை குறிவைத்து ஆட்சேபனைக்குரிய சொல்லாடல்களைப் பயன்படுத்துவது தவிர்க்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
மத்திய அரசின் தேர்வு சீர்திருத்தங்களுக்கான பணிக்குழு தொடர்பான விவாதத்தின் போது, சென்னை ஐஐடி இயக்குநர் வி.காமகோடியை குறிப்பிட்டு பிரியங்கா காந்தி விமர்சனக் கருத்து தெரிவித்திருந்தார். அந்த கருத்து கல்வியாளர்கள் மத்தியில் பரவலான எதிர்வினையை ஏற்படுத்திய நிலையில், பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த முக்கிய கல்வி நிர்வாகிகள் இணைந்து தங்களது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளனர்.
நாலந்தா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சச்சின் சதுர்வேதி, நிதி ஆயோக்கின் முன்னாள் தலைவர் ராஜீவ் குமார், யுபிஎஸ்சி முன்னாள் தலைவர் டி.பி. அகர்வால் உள்ளிட்டோர் கையெழுத்திட்டுள்ள அந்தக் கடிதத்தில், நாடாளுமன்ற விவாதங்கள் தர்க்கரீதியான மற்றும் நாகரிகமான கருத்துப் பரிமாற்றங்களுக்கு உரிய மேடையாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. அரசியல் விமர்சனங்களுக்காக கல்வி நிறுவனங்களின் தலைவர்களை இழிவுபடுத்தும் வகையிலான கருத்துகள் முன்வைக்கப்படக் கூடாது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறையில் மூன்று தசாப்தங்களுக்கு மேலான அனுபவம் கொண்டதுடன், இந்தியாவின் முதல் தொழில்முறை நுண்செயலி (Microprocessor) உருவாக்கப் பணியிலும் முக்கிய பங்காற்றிய கல்வியாளரான வி.காமகோடியை அரசியல் கேலிக்காக விமர்சிப்பது, தனிநபரின் கண்ணியத்தை மட்டுமல்லாமல், இந்தியாவின் உயர்கல்வி மற்றும் அறிவியல் நிறுவனங்களின் மதிப்பையும் பாதிக்கும் என்று கல்வியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதற்கிடையில், 2025 ஜனவரியில் சென்னையில் நடைபெற்ற பொங்கல் விழாவில் பசு கோமியத்தின் மருத்துவக் குணங்கள் குறித்து வி.காமகோடி பேசியது சமூக வலைதளங்களில் பரவலாக விவாதிக்கப்பட்டது. அப்போது எழுந்த விமர்சனங்களுக்கு பதிலளித்த அவர், அறிவியல் ஆய்விதழ்களில் வெளியிடப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளின் அடிப்படையிலேயே தனது கருத்துகளை முன்வைத்ததாக விளக்கம் அளித்திருந்தார். அந்தச் சம்பவம் மீண்டும் கவனத்திற்கு வந்துள்ள நிலையில், கல்வியாளர்கள் வெளியிட்டுள்ள இந்தக் கண்டனக் கடிதம் அரசியல் மற்றும் கல்வித்துறையில் புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.



