டாஸ்மாக் முறைகேடு புகாரில் செந்தில் பாலாஜி மீது புதிய வழக்கு; 45 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை
டாஸ்மாக் ஒப்பந்தங்கள் மற்றும் டெண்டர் ஒதுக்கீடுகளில் முறைகேடு நடைபெற்றதாக எழுந்துள்ள புகாரின் அடிப்படையில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்ட 7 பேர், சில தனியார் நிறுவனங்கள் மற்றும் அடையாளம் தெரியாத சிலர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை புதிய வழக்குப் பதிவு செய்துள்ளது. இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் 45 இடங்களில் ஒரே நேரத்தில் சோதனை நடத்தப்பட்டது.
கடந்த 2021 முதல் 2025 வரை டாஸ்மாக் பார் உரிமங்கள், போக்குவரத்து ஒப்பந்தங்கள், மதுபான விநியோகம் மற்றும் டெண்டர் ஒதுக்கீடுகளில் பல கோடி ரூபாய் மதிப்பிலான முறைகேடுகள் நடைபெற்றதாக புகார்கள் எழுந்தன. இதன் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட புதிய வழக்கைத் தொடர்ந்து, சென்னை, கரூர், கோவை, புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர், நாமக்கல், திருப்பூர், ஈரோடு, நீலகிரி, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம் மற்றும் சிவகங்கை உள்ளிட்ட மாவட்டங்களில் டாஸ்மாக் அலுவலகங்கள், கிடங்குகள், தனியார் மதுபான ஆலைகள், ஒப்பந்ததாரர்கள் மற்றும் அதிகாரிகளுக்குச் சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
சோதனையின்போது வரவு-செலவு பதிவுகள், டெண்டர் ஆவணங்கள், ஒப்பந்தக் கோப்புகள், கணினி தரவுகள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஓட்டலில் தங்கியிருந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் கூடுதல் எஸ்.பி. யுவராஜ் தலைமையிலான குழுவினர் சுமார் மூன்றரை மணி நேரம் விசாரணை நடத்தினர். கரூரில் அவரது பெற்றோர் வீடு, முன்னாள் நேர்முக உதவியாளர் மற்றும் சில திமுக நிர்வாகிகள் வீடுகள் உள்ளிட்ட பல இடங்களிலும் சோதனை நடைபெற்றது.
மேலும், சென்னை தி.நகர், புதுக்கோட்டை, திருவாரூர், தஞ்சாவூர், கோவை உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் தனியார் மதுபான உற்பத்தி நிறுவனங்கள், காலி பாட்டில் சுத்திகரிப்பு நிறுவனங்கள் மற்றும் டாஸ்மாக் கிடங்குகளிலும் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். திருவாரூர் மாவட்டத்தில் இயங்கி வரும் முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர். பாலுவின் மகன் ராஜ்குமாருக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் மதுபான ஆலையிலும் சோதனை நடத்தப்பட்டது.
முதல் தகவல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள குற்றச்சாட்டுகளின்படி, பார் உரிமங்களுக்கான டெண்டர்களில் ஒரே வங்கியில் இருந்து தொடர்ச்சியான எண்களில் டிமாண்ட் டிராஃப்ட்கள் எடுத்து பலர் பெயரில் விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டதாகவும், இதன் மூலம் போட்டியாளர்கள் புறக்கணிக்கப்பட்டு குறிப்பிட்ட நபர்களுக்கு உரிமங்கள் வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உரிமம் புதுப்பிக்கப்படாத பார்கள் மீது நடவடிக்கை எடுக்காததால் கோவை வடக்கு, கோவை தெற்கு மற்றும் நீலகிரி மாவட்டங்களில் மட்டும் அரசுக்கு ரூ.32.81 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக் போக்குவரத்து ஒப்பந்தங்கள், காலி பாட்டில்கள் விநியோகம், போலி பில்கள் மூலம் பணப் பரிவர்த்தனை மற்றும் கடைகளில் கூடுதல் தொகை வசூல் செய்யப்பட்டதாகவும் வழக்கில் குற்றச்சாட்டுகள் இடம்பெற்றுள்ளன. இந்த வழக்கில் 145 பக்க ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், அமலாக்கத் துறையும் ஏற்கனவே விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் நடைபெற்ற சோதனைகளில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், மின்னணு சாதனங்கள் மற்றும் கணக்குப் பதிவுகள் தடயவியல் ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளன. அவற்றின் ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் மேலும் சிலரிடம் விசாரணை நடத்தப்படலாம் என்றும், வழக்கின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்படும் என்றும் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சோதனைக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செந்தில் பாலாஜி, தனது அறையில் நடத்தப்பட்ட சோதனையில் எந்த ஆவணமும் பறிமுதல் செய்யப்படவில்லை என்று அதிகாரிகள் எழுத்துப்பூர்வமாக பதிவு செய்து அதன் நகலை வழங்கியுள்ளதாக தெரிவித்தார். இந்த வழக்கை சட்டரீதியாக எதிர்கொள்வோம் என்றும், “மடியில் கனமில்லை; வழியில் பயமில்லை” என்பதே தங்களது நிலைப்பாடு என்றும் அவர் கூறினார்.



