“பாஜக அரசை மாற்றும் நேரம் வந்துவிட்டது” – தர்மேந்திர பிரதான் ராஜினாமா பின் ராகுல் காந்தி கருத்து
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இது நாட்டின் கல்வி அமைப்பை சீரமைப்பதற்கான முக்கியமான முன்னேற்றம் எனக் கூறியுள்ளார். மேலும், மாணவர் போராட்டத்தின் வெற்றியை பாராட்டிய அவர், தற்போதைய பாஜக அரசை மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டதாகவும் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
வெளியிட்ட வீடியோ செய்தியில் ராகுல் காந்தி, நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். தங்களது எதிர்காலம், ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பை பாதுகாக்க அமைதியான முறையில் போராடிய மாணவர்களின் உறுதியை பாராட்டிய அவர், கல்வி அமைச்சரின் ராஜினாமா மாணவர் இயக்கத்தின் முக்கிய வெற்றி என்றும் குறிப்பிட்டார்.
அதேநேரத்தில், மாணவர்கள் முன்வைத்த மற்ற இரண்டு கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட வேண்டும் என்று ராகுல் காந்தி வலியுறுத்தினார். மாணவர்களை மதிக்கும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி மன்னிப்பு கோர வேண்டும் என்றும், மாணவர் போராட்டங்களின்போது வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறப்படுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும், விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் ஏழை மக்களும் அரசியலமைப்புச் சட்டத்தின் வரம்பிற்குள் தங்களது உரிமைகளுக்காக ஒன்றிணைந்து போராட வேண்டும் என்றும் அவர் அழைப்பு விடுத்தார்.
இதனிடையே, கேரள மாநிலம் வயநாட்டில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் பொதுச் செயலாளரும் எம்.பி.யுமான பிரியங்கா காந்தி, மாணவர்களின் போராட்டத்தை இந்திய இளைஞர்களின் வெற்றியாக வர்ணித்தார். வன்முறையற்ற ஜனநாயக வழியில் தொடர்ந்து போராடிய மாணவர்கள், தங்களது கோரிக்கைகளை அரசிடம் ஏற்கச் செய்திருப்பது நாட்டின் ஜனநாயகத்தின் வலிமையை வெளிப்படுத்துவதாக அவர் கூறினார்.
மாணவர்கள் மீது தடியடி, கண்ணீர்ப்புகைக் குண்டு மற்றும் பிற அடக்குமுறை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறிய பிரியங்கா காந்தி, அதற்குப் பிறகும் அவர்கள் பின்வாங்காமல் போராடியதாக தெரிவித்தார். மக்களின் விருப்பமே ஜனநாயகத்தில் உயர்ந்தது என்பதையும், அதை எந்த ஆட்சியும் புறக்கணிக்க முடியாது என்பதையும் இந்த போராட்டம் நிரூபித்துள்ளதாக அவர் கூறினார். மேலும், தேர்வு முறையில் சீர்திருத்தம் மற்றும் வினாத்தாள் கசிவு பிரச்சினைகளை தொடர்ந்து எழுப்பிய ராகுல் காந்தியின் பங்களிப்பையும் அவர் பாராட்டியதுடன், இது ஒரு தொடக்கம் மட்டுமே என்றும் தனது நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.



