நீட் தேர்வுக்கு எதிரான மாணவர் போராட்டத்திற்கு தமிழக அரசின் முழு ஆதரவு: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா அறிவிப்பு
நீட் தேர்வு முறைகேடுகளுக்கு எதிராக டெல்லியில் போராடி வரும் மாணவர்களுக்குத் தமிழக அரசின் முழு ஆதரவும் உண்டு என்று அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். எஸ்ஆர்எம் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்றுப் பேசிய அவர், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்பதில் தமிழக முதலமைச்சர், தமிழக அரசு, தவெக மற்றும் பொதுமக்கள் அனைவரும் ஒரே நேர்க்கோட்டில் உறுதியாக இருப்பதாகக் குறிப்பிட்டார்.
தமிழகம் எப்போதுமே நீட் தேர்வுக்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருவதாகச் சுட்டிக்காட்டிய அவர், அனிதா முதல் பல உயிர்களைத் தமிழகம் இழந்துள்ளதாக வேதனை தெரிவித்தார். எளிய பின்னணியைக் கொண்ட மாணவர்களால் லட்சக்கணக்கில் பணம் கொடுத்துப் பயிற்சி பெற முடியாது என்பதால், நீட் எதிர்ப்பு என்பது வெறும் அரசியல் சார்ந்த விஷயம் அல்ல என்றும் சமூக நீதியின் அடிப்படையில் திறமையான மருத்துவர்களை உருவாக்கும் நோக்கம் கொண்டது என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.
முன்பு கொண்டுவரப்பட்ட வேளாண் சட்டங்களை மத்திய பாஜக அரசு திரும்பப் பெற்றது போல, நாடாளுமன்றத்தில் நீட் தேர்வும் நிச்சயம் வாபஸ் பெறப்படும் என்றும் அதற்குத் தமிழகத்தின் குரல் முதன்மையானதாக இருக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். டெல்லி ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) தலைமையில் நடைபெற்று வரும் போராட்டத்தின் மீது காவல்துறை தடியடி நடத்திய சூழலில், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இப்போராட்டம் தீவிரமடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.



