தமிழக பட்ஜெட் 2026-27: ரூ.3,500 கோடியில் ‘வெற்றி வீடு திட்டம்’ முதல் தங்க மோதிரம் வரை முக்கிய அறிவிப்புகள்
தமிழக அரசின் முதல் பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் மரிய வில்சன் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இதில் கிராமப்புற வளர்ச்சி, வீட்டு வசதி, விவசாயம், மீனவர் நலன், கூட்டுறவு, சிறுபான்மையினர் நலன் உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கான புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
கிராமப்புற வறுமையை முழுமையாக ஒழித்து, அனைவருக்கும் கண்ணியமான வாழ்க்கை வசதியை ஏற்படுத்தும் நோக்கில் ‘வெற்றி வீடு திட்டம்’ அறிமுகப்படுத்தப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் கூரை வீடுகளில் வசிக்கும் மக்களுக்கு கான்கிரீட் வீடுகள் கட்டுவதற்கான அலகுத் தொகை ரூ.3.10 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.
முதல் கட்டமாக ரூ.3,500 கோடி செலவில் 70 ஆயிரம் வீடுகளுக்கு ஒப்புதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஊரக வளர்ச்சித் துறையில் குடிநீர் வசதி, திடக்கழிவு மேலாண்மை, சுகாதாரம் மற்றும் கிராமப்புற சாலை வசதிகளை மேம்படுத்த ‘தமிழ்நாடு கிராமப்புற அதிகாரமளித்தல் மற்றும் மறுமலர்ச்சி முன்னெடுப்பு’ என்ற புதிய திட்டம் செயல்படுத்தப்படும். இதற்காக ரூ.6 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
நகர்ப்புறங்களை ஒட்டியுள்ள கிராமப்புற பகுதிகளின் அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ.1,000 கோடியில் தனித்திட்டமும், மலைப்பகுதி ஊராட்சிகளின் வளர்ச்சிக்காக ஆண்டுதோறும் ரூ.100 கோடி நிதியுடன் சிறப்பு திட்டமும் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிராமப்புற ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், வளர்ச்சியடைந்த பாரதம்-கிராம வேலை உறுதி மற்றும் வாழ்வாதார திட்டத்திற்கு மாநில அரசின் பங்களிப்பாக ரூ.5,057 கோடியுடன் மொத்தம் ரூ.12,642 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் 150 நாட்கள் வேலைவாய்ப்பை வழங்கும் வகையில் ‘வெற்றி 150’ என்ற புதிய முயற்சி செயல்படுத்தப்படும்.
மகளிர் சுயஉதவிக் குழுக்களை சிறு தொழில் நிறுவனங்களாக வளர்க்க ‘சிங்கப்பெண் வலிமைப்படுத்தும் திட்டம்’ தொடங்கப்படும். சிறப்பாக செயல்படும் குழுக்களுக்கு ரூ.5 லட்சம் முதலீட்டு மானியம் வழங்கப்படும். மேலும், மகளிர் குழுக்களுக்கு இந்த ஆண்டு ரூ.38 ஆயிரம் கோடி வங்கிக் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஊரக வளர்ச்சித் துறைக்கு மொத்தமாக ரூ.39,609 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அரசு மருத்துவமனைகளில் பிரசவங்களை ஊக்குவிக்கும் வகையில் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் அனைத்து குழந்தைகளுக்கும் தாய்மாமன் அன்பளிப்பாக 1 கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும். இதற்காக ரூ.560 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
கூட்டுறவுத் துறைக்கு ரூ.8,028 கோடியும், விவசாயிகளுக்கான மின் மானியத்துக்கு ரூ.7,432 கோடியும், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறைக்கு ரூ.14,984 கோடியும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
பாரம்பரிய மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் மீனவர் குடும்பங்களுக்கு வழங்கப்படும் மீன்பிடி உதவித்தொகை ரூ.6 ஆயிரத்தில் இருந்து ரூ.7 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 1.93 லட்சம் மீனவர் குடும்பங்கள் பயன்பெறும் என்றும், இதற்காக ரூ.135 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீர் வளத்தை மேம்படுத்தும் வகையில் நதி இணைப்பு திட்டங்களுக்கு ரூ.200 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு ரூ.150 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. காவிரி, வைகை, தாமிரபரணி ஆறுகளின் மாசுபாட்டை தடுப்பதற்கான ஆய்வுகளுக்கு ரூ.25 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
காவிரி மற்றும் கொள்ளிடம் ஆறுகளின் குறுக்கே தடுப்பணைகள் அமைப்பதற்கான ஆய்வுக்கு ரூ.10 கோடியும், காவிரி டெல்டா சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு ஆய்வுக்கு ரூ.10 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. நீர்வளத் துறைக்கு மொத்தமாக ரூ.9,264 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது.
சிறுபான்மையினர் நலனை கருத்தில் கொண்டு, தமிழக ஹஜ் கமிட்டி மூலம் முதல்முறையாக ஹஜ் பயணம் மேற்கொள்ளும் பயணிகளுக்கான மானியம் ரூ.25 ஆயிரத்தில் இருந்து ரூ.35 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும், கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் மகளிர் உதவும் சங்கங்களை விரிவுபடுத்த ரூ.1.05 கோடியும், கபர்ஸ்தான் மற்றும் கல்லறை தோட்டங்களின் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கு ரூ.34 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறைக்கு ரூ.1,700 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழ் மொழி வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், 300 திருக்குறள்களை சரளமாக கூறும் 500 தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு தலா ரூ.5 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், காயிதே மில்லத் வரலாற்றுப் பெருமையை போற்றும் வகையில் ஆண்டுதோறும் திருவள்ளுவர் தினத்தில் அவரது பெயரில் விருது வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழுக்கான செயற்கை நுண்ணறிவு மாதிரி உருவாக்கும் பணிகள் முன்னணி பல்கலைக்கழகங்களுடன் இணைந்து மேற்கொள்ளப்படும். கீழடி உள்ளிட்ட தொல்லியல் மற்றும் பாரம்பரிய தலங்களை பள்ளி மாணவர்கள் பார்வையிட கல்விச் சுற்றுலா திட்டத்துக்கு ரூ.1 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.



