அதிமுக வேட்பாளரிடம் ரூ.4.50 கோடி பெற்றதாக சி.விஜயபாஸ்கர் மீது மாவட்ட செயலாளர் குற்றச்சாட்டு
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் தன.விமலிடம் இருந்து ரூ.4.50 கோடி பெற்றதாகவும், தேர்தலில் வெற்றி பெறாத நிலையில் அந்தத் தொகையை திருப்பி வழங்கவில்லை என்றும் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீது அதிமுக மாவட்ட செயலாளர் வி.பழனிவேல் குற்றம்சாட்டியுள்ளார்.
புதுக்கோட்டை அதிமுக வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட ஒன்றிய மற்றும் நகர நிர்வாகிகள் கூட்டம் ஆதனக்கோட்டையில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பேசிய மாவட்ட செயலாளர் வி.பழனிவேல், தேர்தலுக்கு முன்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மேற்கொண்ட பிரச்சார பயணத்தின் போது, கட்சி நிர்வாகிகளிடம் இருந்து பணம் வசூலித்தே முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தேர்தல் செலவுகளை மேற்கொண்டதாக தெரிவித்தார்.
மேலும், தேர்தலில் போட்டியிடுவதற்காக தன்னிடமும், முன்னாள் எம்.எல்.ஏ. நெடுஞ்செழியனிடமும் பணம் ஏற்பாடு செய்து தருமாறு விஜயபாஸ்கர் கேட்டதாகவும், தேவையான பணத்தை சொத்துகளை விற்றாவது திரட்டிக் கொண்டு வர வேண்டும் எனக் கூறியதாகவும் பழனிவேல் தெரிவித்தார்.
ஆலங்குடி தொகுதியில் அதிமுக வேட்பாளராக களமிறங்கிய தன.விமலிடம் இருந்து கட்சி சீட்டுக்காக ரூ.4.50 கோடி தொகையை சி.விஜயபாஸ்கர் பெற்றதாகவும், ஆனால் அவர் தேர்தலில் வெற்றி பெறாததால் அந்த பணத்தை மீண்டும் வழங்கவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார். மேலும், பணத்தை கட்சிதான் பெற்றுத் தர வேண்டும் என்று விஜயபாஸ்கர் தங்களிடம் தெரிவித்ததாகவும் பழனிவேல் கூறினார்.
அதிமுக ஆட்சிக் காலத்தில் அமைச்சர் உள்ளிட்ட முக்கிய பதவிகளை வகித்து சி.விஜயபாஸ்கர் சம்பாதித்ததாக கூறிய பழனிவேல், தற்போது தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளுக்கு கார் வாங்கிக் கொடுக்க இருப்பதாக தகவல் வெளியாகி வருவதாகவும், அதற்கான பணம் எங்கிருந்து வருகிறது என்றும் கேள்வி எழுப்பினார்.
மேலும், விராலிமலை தொகுதி இடைத்தேர்தலில் நேரடியாக சந்திப்போம் என்றும் அதிமுக மாவட்ட செயலாளர் வி.பழனிவேல் தெரிவித்துள்ளார். அவர் முன்வைத்த குற்றச்சாட்டுகள் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இதுகுறித்து சி.விஜயபாஸ்கர் தரப்பில் இருந்து பதில் எதுவும் வெளியாகவில்லை.



