ரூ.60 கோடி மதிப்புள்ள மீனாட்சி அம்மன் கோயில் நிலம் மோசடியாக அபகரிப்பு: முன்னாள் அதிகாரிகள் உட்பட 19 பேர் மீது வழக்குப்பதிவு
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குச் சொந்தமான சுமார் ரூ.60 கோடி மதிப்புள்ள நிலம் போலி ஆவணங்கள், முறைகேடான பட்டா மாற்றம் மற்றும் சட்டவிரோத பத்திரப் பதிவுகள் மூலம் அபகரிக்கப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக முன்னாள் சார்பதிவாளர்கள், முன்னாள் வட்டாட்சியர், கிராம நிர்வாக அலுவலர் (விஏஓ) உள்ளிட்ட 19 பேர் மீது போலீசார் மோசடி மற்றும் கூட்டுச் சதி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கும் அழகர் கோயிலுக்கும் தர்மப் பணிகள் நடைபெற வேண்டும் என்ற நோக்கில், புதுக்கோட்டை அரச குடும்பத்தைச் சேர்ந்த தட்சிணாமூர்த்தி துரை ராஜா மற்றும் துரை ராணி அறக்கட்டளை சார்பில் 1930-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட உயிலின் மூலம், மதுரை பிபீகுளம் பகுதியில் அமைந்துள்ள 1.79 ஏக்கர் பரப்பளவிலான ‘அசோக விலாஸ்’ பங்களா மற்றும் தோட்டம் கோயிலுக்கு வழங்கப்பட்டிருந்தது. அந்த சொத்திலிருந்து கிடைக்கும் வருமானம் கோயில் வழிபாடுகள், அன்னதானம், ஏழை மாணவர்களின் கல்வி உதவி உள்ளிட்ட தர்மச் செயல்களுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும் என்றும், அந்த நிலத்தை விற்பனை செய்யவோ, அடமானம் வைக்கவோ கூடாது என்றும் உயிலில் தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இருப்பினும், கடந்த 2016-ஆம் ஆண்டு கோயில் பெயரில் இருந்த பட்டா முறைகேடாக தனிநபர்களின் பெயருக்கு மாற்றப்பட்டதாக கூறப்படுகிறது. பின்னர் நடைபெற்ற விசாரணையில் அந்த பட்டா மாற்றம் ரத்து செய்யப்பட்டு மீண்டும் கோயில் பெயருக்கு மாற்றப்பட்டது. மேலும், கோயில் அனுமதியின்றி அந்த சொத்தில் எந்தவித பட்டா மாற்றமோ அல்லது பதிவு நடவடிக்கையோ மேற்கொள்ளக்கூடாது என்று நீதிமன்றமும் சம்பந்தப்பட்ட பதிவு அலுவலகங்களுக்கும் உத்தரவிட்டிருந்தது. ஆனால், இந்த உத்தரவுகளையும் மீறி 2018 மற்றும் 2021-ஆம் ஆண்டுகளில் பல்வேறு நபர்களுக்கு சொத்து விற்பனை செய்யப்பட்டதோடு, பின்னர் அந்த ஆவணங்களை பயன்படுத்தி அடமானப் பதிவுகளும் செய்யப்பட்டதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த முறைகேடு குறித்து மீனாட்சி அம்மன் கோயில் இணை ஆணையர் அளித்த புகாரின் அடிப்படையில், மதுரை மாநகர மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதனைத் தொடர்ந்து, முறைகேடான பட்டா மாற்றம், போலி பத்திரப் பதிவு மற்றும் மோசடி பரிவர்த்தனைகளில் தொடர்புடையதாகக் கூறப்படும் 19 பேர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் மோசடி (420), கூட்டுச் சதி (120B) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் முன்னாள் அரசுத் அதிகாரிகள், சார்பதிவாளர்கள் மற்றும் தனிநபர்கள் இடம்பெற்றுள்ளனர்.
சம்பந்தப்பட்ட சொத்தின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.60 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் பழநி கோயிலுக்குச் சொந்தமான நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம் தொடர்பாகவும் இதுபோன்ற முறைகேடு வெளிச்சத்துக்கு வந்த நிலையில், தற்போது மீனாட்சி அம்மன் கோயில் நில மோசடி விவகாரமும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய அனைவரின் பங்களிப்பும், ஆவணங்களின் உண்மைத்தன்மையும் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



