கார்கில் வெற்றி தின நிகழ்ச்சியில் கூட்டணி விரிசல் வெளிப்பாடு: பாஜகவினர் தனியாக மரியாதை செலுத்தினர்
கார்கில் வெற்றி தினத்தையொட்டி புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் கூட்டணி கட்சிகளுக்கிடையேயான கருத்து வேறுபாடு வெளிப்பட்டதாக கூறப்படுகிறது. முதல்வர் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் பாஜகவினர் கலந்து கொள்ளாமல், பின்னர் தனியாக வந்து போர் நினைவுச் சின்னத்தில் மரியாதை செலுத்தினர்.
1999-ஆம் ஆண்டு பாகிஸ்தானுடன் நடைபெற்ற கார்கில் போரில் இந்திய ராணுவம் பெற்ற வெற்றியை நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் ஜூலை 26-ஆம் தேதி கார்கில் வெற்றி தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. போரில் உயிரிழந்த வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தவும், நாட்டின் பாதுகாப்புக்காக பணியாற்றும் ராணுவ வீரர்களை கவுரவிக்கவும் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
இதையொட்டி, புதுச்சேரி கடற்கரை சாலையில் அமைந்துள்ள போர் நினைவுச் சின்னத்தில் புதுச்சேரி அரசு சார்பில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி, சட்டப்பேரவைத் தலைவர் அன்பழகன், அமைச்சர்கள் ராஜவேலு, சிவக்கொழுந்து உள்ளிட்டோர் கலந்து கொண்டு மலர் வளையம் வைத்து வீரர்களுக்கு மரியாதை செலுத்தினர்.
மேலும், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். ஆனால், புதுச்சேரியில் கூட்டணி ஆட்சியில் இடம்பெற்றுள்ள பாஜக அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் இந்த அரசு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை.
புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் – பாஜக கூட்டணி ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், அமைச்சரவையில் ஏற்பட்டுள்ள அதிருப்தி காரணமாக பாஜக தரப்பு அரசு நிகழ்ச்சிகளை புறக்கணித்து வருவதாக கூறப்படுகிறது. கடந்த முறை வகித்த அமைச்சர் பதவிகளை முதல்வர் ரங்கசாமி மீண்டும் வழங்காததால் பாஜகவினர் அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து கேட்டபோது, பாஜகவினர் தனியாக வந்து கார்கில் வீரர்களுக்கு மரியாதை செலுத்துவார்கள் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி, முதல்வர் பங்கேற்ற அரசு நிகழ்ச்சி முடிந்த பின்னர், பாஜக மாநிலத் தலைவர் ராமலிங்கம் தலைமையில் அமைச்சர் நமச்சிவாயம், முன்னாள் பேரவைத் தலைவர் செல்வம் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் தனியாக வந்து போர் நினைவுச் சின்னத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.
இதன் மூலம் கார்கில் வெற்றி தின நிகழ்ச்சியில் கூட்டணி கட்சிகளுக்கு இடையேயான அரசியல் வேறுபாடு மீண்டும் வெளிப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.



