கர்நாடகாவில் மனைவியை கொலை செய்த கணவர் கைது: பெற்றோருக்கு வீடியோ அனுப்பிய சம்பவம் அதிர்ச்சி
கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை மாவட்டத்தில் மனைவியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதால் அவரை கொலை செய்ததாக கூறப்படும் கணவரை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும், கொலை சம்பவத்தை வீடியோவாக பதிவு செய்து மனைவியின் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு அனுப்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாகல்கோட்டை மாவட்டம் கள்குலி கிராமத்தைச் சேர்ந்த பிரவீன் அசோக் (29) என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த பாக்யஸ்ரீ (24) என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 3 வயதில் ஒரு மகன் உள்ள நிலையில், மனைவிக்கு திருமணத்தை மீறிய உறவு இருப்பதாக பிரவீன் அசோக் சந்தேகித்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், கடந்த திங்கள்கிழமை இரவு சுமார் 11 மணியளவில் ஏற்பட்ட பிரச்சினையில், பிரவீன் அசோக் இரும்புக் கம்பியால் தாக்கி பாக்யஸ்ரீயை கொலை செய்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், உயிருக்கு போராடிக் கொண்டிருந்த மனைவியை வீடியோவாக பதிவு செய்து, அந்த காட்சிகளை அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு வாட்ஸ்அப் மூலம் அனுப்பியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக பாக்யஸ்ரீயின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதையடுத்து, பிரவீன் அசோக் கைது செய்யப்பட்டு பாகல்கோட்டை மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் அவரை 7 நாட்கள் காவலில் எடுத்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



