நேபாளத்தில் ரூ.25,000 வரை ரூ.200, ரூ.500 இந்திய ரூபாய் நோட்டுகளை பயன்படுத்த அனுமதி
நேபாளத்தில் ரூ.200 மற்றும் ரூ.500 மதிப்புள்ள இந்திய ரூபாய் நோட்டுகளை பயன்படுத்துவதற்கு புதிய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக நேபாள ராஷ்டிர வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்திய மற்றும் நேபாள மக்கள் குறிப்பிட்ட வரம்புக்குள் இந்த நோட்டுகளை கொண்டு செல்லவும், பயன்படுத்தவும் அனுமதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய விதிமுறைகளின்படி, 2016-ஆம் ஆண்டு நவம்பர் 9-ஆம் தேதி மற்றும் அதற்கு பிறகு வெளியிடப்பட்ட ரூ.200 மற்றும் ரூ.500 இந்திய கரன்சி நோட்டுகளை நேபாளத்தில் பயன்படுத்தலாம். இந்திய மதிப்பில் அதிகபட்சமாக ரூ.25,000 வரையிலான இந்திய பணத்தை இரு நாடுகளின் மக்கள் நேபாளத்துக்கு கொண்டு செல்லவும், அங்கிருந்து கொண்டு வரவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த நடைமுறை தொடர்பான அறிவிப்பு கடந்த பிப்ரவரி 11-ஆம் தேதி நேபாள அரசிதழில் வெளியிடப்பட்டிருந்த நிலையில், தற்போது நேபாள ராஷ்டிர வங்கி அதுகுறித்து விரிவான விளக்கத்தை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் சுற்றுலா பயணிகள் மற்றும் இரு நாடுகளுக்கு இடையே வணிக தொடர்பில் ஈடுபடுபவர்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்திய ரூபாய் நோட்டுகளை நேபாள மக்கள் இந்தியாவில் இருந்து மட்டுமே கொண்டு வர அனுமதிக்கப்படுவார்கள் என்றும், வேறு நாடுகளில் இருந்து இந்திய கரன்சியை கொண்டு வர அனுமதி கிடையாது என்றும் நேபாள ராஷ்டிர வங்கி தெரிவித்துள்ளது.
அதேபோல், நேபாளத்தில் இருந்து இந்தியாவுக்கு செல்லும் போது இந்திய ரூபாய் நோட்டுகளை கொண்டு செல்லும் அனுமதியும் இந்தியாவுக்கு மட்டுமே பொருந்தும் என அந்த வங்கியின் செய்தித் தொடர்பாளர் குரு பிரசாத் பவுடேல் தெரிவித்துள்ளார்.
மேலும், பிற நாடுகளில் இருந்து நேபாளத்துக்கு வரும் பயணிகள் 5,000 அமெரிக்க டாலர் மதிப்பிலான வெளிநாட்டு கரன்சியை சுங்கத்துறையிடம் அறிவிக்காமல் கொண்டு வரலாம் என்றும் நேபாள ராஷ்டிர வங்கி குறிப்பிட்டுள்ளது.
இதனிடையே, இந்தியாவில் 2016-ஆம் ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி பணமதிப்பிழப்பு அறிவிப்புக்கு முன்பு புழக்கத்தில் இருந்த பழைய ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் நேபாளத்திலும் செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது.



