பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு: போக்சோ வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை
சென்னையைச் சேர்ந்த பள்ளி மாணவிக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு அளித்த வழக்கில், இளைஞருக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
வழக்கின் விவரங்களின்படி, சென்னை நொளம்பூர் பகுதியைச் சேர்ந்த 17 வயது பள்ளி மாணவிக்கும், ஜான் ஓபெத் (24) என்பவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதன் பின்னர், மாணவிக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு அளித்ததாக அவரது தாயார் கடந்த 2021-ஆம் ஆண்டு திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, ஜான் ஓபெத்தை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இந்த வழக்கு சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாக நீதிமன்றம் தெரிவித்தது. இதையடுத்து, போக்சோ சட்டத்தின் கீழ் ஜான் ஓபெத்துக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி பிரபாகரன் உத்தரவிட்டார்.
மேலும், அபராதத் தொகையை செலுத்தத் தவறினால் கூடுதலாக 6 மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்றும், வசூலிக்கப்படும் அபராதத் தொகை பாதிக்கப்பட்ட சிறுமியின் மறுவாழ்வுக்காக வழங்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதேபோல், தமிழக அரசு சார்பில் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கவும் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.



