‘இப்போது வாங்கி பின்னர் கட்டு’ கலாச்சாரம்: டிஜிட்டல் கடன் வலையில் சிக்கும் ஜென் ஸீ தலைமுறை
டிஜிட்டல் நிதித் தொழில்நுட்பத்தின் வேகமான வளர்ச்சி, மக்களின் வாங்கும் மற்றும் செலவிடும் பழக்கங்களில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக 1997 முதல் 2012-ஆம் ஆண்டு வரை பிறந்த ஜென் ஸீ தலைமுறையைச் சேர்ந்த இளைஞர்களில் ஒரு பகுதியினர், கையில் பணம் இல்லாவிட்டாலும் கடன் மூலம் தங்களது விருப்பங்களை உடனடியாக நிறைவேற்றும் நுகர்வுக் கலாச்சாரத்தை நோக்கி நகர்ந்து வருகின்றனர்.
முன்னதாக நிலம், வீடு, தொழில் போன்ற நீண்டகால முதலீடுகளுக்காகவே மக்கள் அதிகம் கடன் பெற்றனர். ஆனால் தற்போது சுற்றுலா, ஆடம்பரப் பொருட்கள், உணவகச் செலவுகள், ஆடைகள், காலணிகள் மற்றும் விலையுயர்ந்த மின்னணு சாதனங்கள் போன்ற நுகர்வு சார்ந்த தேவைகளுக்காக கடன் பெறும் போக்கு அதிகரித்துள்ளது. கிரெடிட் கார்டுகளும், ‘இப்போது வாங்கி பின்னர் செலுத்தலாம்’ என்ற Buy Now, Pay Later (BNPL) வசதிகளும் இந்த மாற்றத்தை மேலும் வேகப்படுத்தியுள்ளன.
ஒருபுறம் இந்த நுகர்வு சந்தை வளர்ச்சிக்கும் பொருளாதார நடவடிக்கைகளுக்கும் ஊக்கமளித்தாலும், மறுபுறம் பிணையற்ற கடன்களின் அதிகரிப்பு ரிசர்வ் வங்கிக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக வருமானத்தை உருவாக்காத பொருட்கள் மற்றும் அனுபவங்களுக்காக இளைஞர்கள் அதிகளவில் கடன் பெறுவது, எதிர்கால நிதி நிலைத்தன்மைக்கு சவாலாக மாறக்கூடும் என நிதி வட்டாரங்களில் எச்சரிக்கை எழுந்துள்ளது.
ஜென் ஸீ இளைஞர்களை ஈர்க்கும் BNPL
ஆடைகள், மின்னணுப் பொருட்கள், அலங்காரப் பொருட்கள், சுற்றுலா மற்றும் உணவு உள்ளிட்ட பல்வேறு செலவுகளுக்கான தொகையை சிறு தவணைகளாகப் பிரித்து செலுத்தும் வசதியே BNPL எனப்படுகிறது. இணையவழி வர்த்தகமும் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளும் அதிகரித்துள்ள நிலையில், இதுபோன்ற சேவைகளை வழங்கும் செயலிகளின் எண்ணிக்கையும் வேகமாக உயர்ந்துள்ளது.
கிரெடிட் கார்டுகளைப் பெறுவதற்கு தேவையான விரிவான ஆவணங்கள், வருமானச் சான்றுகள் அல்லது அதிக கிரெடிட் ஸ்கோர் போன்ற கடுமையான நிபந்தனைகள் சில BNPL சேவைகளில் இல்லாதது இளைஞர்களை எளிதில் ஈர்க்கிறது. அடையாள விவரங்கள் மற்றும் வங்கிக் கணக்கை இணைத்த சில நிமிடங்களிலேயே கடன் வசதி கிடைப்பதும் உடனடி வாங்கும் பழக்கத்தை ஊக்குவிக்கிறது.
மேலும், குறிப்பிட்ட காலத்துக்கு வட்டி இல்லாத தவணை வசதி வழங்கப்படுவது இளைஞர்களிடம் பொருட்களை உடனடியாக வாங்கும் ஆர்வத்தை அதிகரிக்கிறது. சிபில் தொடர்பான தரவுகளின்படி, ரூ.10,000-க்கும் குறைவான சிறிய அளவிலான பிணையற்ற கடன்கள் கடந்த சில ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளன. சிறு மற்றும் குறு நகரங்களில் வசிக்கும் இளைஞர்களும் இத்தகைய டிஜிட்டல் கடன் வசதிகளை அதிகம் பயன்படுத்தி வருவதாகக் கூறப்படுகிறது.
ஆர்பிஐக்கு அதிகரிக்கும் கவலை
வீட்டுக் கடன், வேளாண் கடன் மற்றும் வர்த்தகக் கடன்களை ஒப்பிடும்போது பிணையற்ற சில்லறைக் கடன்களின் வேகமான வளர்ச்சி ரிசர்வ் வங்கியின் கவனத்தை ஈர்த்துள்ளது. நிதி அமைச்சக புள்ளிவிவரங்களின்படி, 2025 மார்ச் மாதத்தில் குடும்பங்களின் மொத்தக் கடனில் சில்லறைக் கடனின் பங்கு 54.9 சதவீதமாக இருந்த நிலையில், 2026 மார்ச் மாதத்தில் அது 58.4 சதவீதமாக உயர்ந்துள்ளது.
ஒரு குடும்பத்திற்கான சராசரி கடன் அளவும் 2018 மார்ச் மாதத்தில் ரூ.3.41 லட்சமாக இருந்த நிலையில், 2025 மார்ச் இறுதியில் ரூ.4.78 லட்சமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், தனிநபர்களின் மொத்தக் கடன் 2022 மார்ச் மாதத்தில் ரூ.9.02 லட்சம் கோடியாக இருந்த நிலையில், 2026 மார்ச் மாதத்தில் ரூ.17.32 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. நகைக் கடன்களும் ரூ.4.61 லட்சம் கோடியை எட்டியுள்ளன.
கடன் வழங்கும் நிறுவனங்களால் ஒவ்வொரு கடன் பெறுபவரின் உண்மையான வருமானத்தையும் முழுமையாக மதிப்பிட முடியாத சூழல் இருப்பதாகக் கூறப்படுகிறது. இதன் பின்னணியில், கடன் சேவை செயலிகளைப் பயன்படுத்தும் 35 வயதுக்குட்பட்ட இளம் நுகர்வோரின் பங்கு 2026-ஆம் ஆண்டில் 39 சதவீதமாக அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சேமிப்பை விட செலவுக்கு முக்கியத்துவம்
‘பைசாபஜார்’ ஆய்வின்படி, 1960-70களில் பிறந்தவர்கள் பொதுவாக 30 வயதின் பிற்பகுதியிலோ அல்லது 40 வயதிலோதான் பிணையம் சார்ந்த முதல் கடனைப் பெற்றுள்ளனர். ஆனால் 1990களில் பிறந்தவர்களும் ஜென் ஸீ தலைமுறையினரும் 20 வயதின் நடுப்பகுதியிலேயே தனிநபர் கடன், கிரெடிட் கார்டு மற்றும் BNPL போன்ற கடன் வசதிகளைப் பயன்படுத்தத் தொடங்குவதாக ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.
2025-ஆம் ஆண்டின் முதல் பாதியில் பெறப்பட்ட தனிநபர் கடன்களில் சுமார் 25 சதவீதம் சுற்றுலா உள்ளிட்ட செலவுகளுக்காக பயன்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஜென் ஸீ தலைமுறையினரிடம் எதிர்காலத்துக்காக சேமிக்கும் பழக்கத்தை விட, தற்போதைய வாழ்க்கை முறைக்காக அதிகம் செலவிடும் போக்கு உருவாகி வருவது கவனத்தைப் பெற்றுள்ளது.
கடன் சுமையால் ஏற்படும் ஆபத்துகள்
கையில் பணம் இல்லாவிட்டாலும் உடனடியாக வாங்க முடியும் என்ற எண்ணம் தேவையற்ற மற்றும் திட்டமிடப்படாத செலவுகளை அதிகரிக்கலாம். தவணைத் தொகையை உரிய காலத்தில் செலுத்தத் தவறினால், சில கடன் சேவைகளில் அதிக வட்டி மற்றும் தாமதக் கட்டணங்கள் விதிக்கப்படுவதற்கான வாய்ப்பும் உள்ளது.
சிறிய தொகை தவணை செலுத்துவதில் ஏற்படும் தாமதம்கூட கடன் வரலாற்றில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். இதன் விளைவாக எதிர்காலத்தில் வீடு, கல்வி அல்லது தொழில் போன்ற முக்கிய தேவைகளுக்கான கடன் பெறுவதிலும் சிக்கல்கள் ஏற்படலாம். ஒரு கடனை அடைப்பதற்காக மற்றொரு செயலியில் புதிய கடன் பெறும் நிலை உருவானால், அது இளைஞர்களை கடன் சுழற்சிக்குள் சிக்க வைக்கும் அபாயத்தையும் அதிகரிக்கிறது.
ஆர்பிஐ மேற்கொள்ளும் நடவடிக்கைகள்
பிணையற்ற கடன்களின் அதிகரிப்பு நாட்டின் நிதி ஸ்திரத்தன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்பதால், வங்கிகள் மற்றும் வங்கியல்லா நிதி நிறுவனங்களுக்கான அபாயக் கட்டுப்பாடுகளை ரிசர்வ் வங்கி கடுமையாக்கியுள்ளது. போலியான கடன் செயலிகளுக்கு எதிராக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதுடன், BNPL உள்ளிட்ட கடன் பரிவர்த்தனைகளை கடன் தகவல் அமைப்புகளில் பதிவு செய்யும் நடைமுறைகளும் வலுப்படுத்தப்பட்டுள்ளன.
டிஜிட்டல் நிதி சேவைகள் அவசரத் தேவைகளில் மக்களுக்கு பயனுள்ளதாக இருந்தாலும், அவற்றை கட்டுப்பாடின்றி நுகர்வுக்கும் ஆசைகளை உடனடியாக நிறைவேற்றுவதற்கும் பயன்படுத்துவது எதிர்கால நிதி நிலைத்தன்மையை பாதிக்கக்கூடும். எனவே, ஜென் ஸீ தலைமுறையினர் திட்டமிட்ட வரவு-செலவு, போதுமான சேமிப்பு மற்றும் பொறுப்பான கடன் பயன்பாட்டை கடைப்பிடிப்பதே அதிகரித்து வரும் டிஜிட்டல் கடன் சுமையிலிருந்து பாதுகாத்துக்கொள்ளும் முக்கிய வழியாக இருக்கும்.



