நள்ளிரவு முதல் அமலாகிறது மீன்பிடி தடைக்காலம்: ஆழ்கடல் விசைப்படகுகள் அவசரமாகக் கரை திரும்பின!
கன்னியாகுமரி மாவட்டத்தின் மேற்கு கடற்கரைப் பகுதிகளில் இன்று நள்ளிரவு முதல் வருடாந்திர மீன்பிடி தடைக்காலம் அமலுக்கு வரவுள்ளது. இதன் காரணமாக, ஆழ்கடலில் தங்கி மீன்பிடித்துக் கொண்டிருந்த நூற்றுக்கணக்கான விசைப்படகுகள் அவசர அவசரமாகக் கரை நோக்கித் திரும்பி வருகின்றன. கடல்வளத்தைப் பாதுகாக்கவும், மீன்களின் தடையற்ற இனப்பெருக்கத்தை உறுதி செய்யவும் ஆண்டுதோறும் 60 நாட்களுக்குக் கடலில் மீன்பிடிக்க மத்திய அரசு தடை விதிப்பது வழக்கம். அந்த வகையில், கன்னியாகுமரி மாவட்டத்தில் புவியியல் ரீதியாக இந்த மீன்பிடித் தடைக்காலம் இரண்டு வெவ்வேறு பருவங்களாகப் பிரித்துப் பின்பற்றப்பட்டு வருகிறது.
மாவட்டத்தின் கிழக்கு கடற்கரை பகுதியான சின்னமுட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 15-ஆம் தேதி வரை தடைக்காலம் நடைமுறையில் இருக்கும். அதேவேளையில், மேற்கு கடற்கரை பகுதிகளான மணக்குடி, ராஜாக்கமங்கலம், முட்டம், குளச்சல், தேங்காய்பட்டணம், கொல்லங்கோடு, நீரோடி மற்றும் அதனை ஒட்டியுள்ள கேரள அரபிக்கடல் பகுதிகளில் ஜூன் 1-ஆம் தேதி (நாளை) முதல் ஜூலை 31-ஆம் தேதி வரை இந்தத் தடைக்காலம் அமலில் இருக்கும்.
பராமரிப்புப் பணிகள் தீவிரம்: இந்த 60 நாட்கள் தடைக்காலத்தை முன்னிட்டு, விசைப்படகு மீனவர்கள் தங்களின் படகுகளைப் பழுதுபார்க்கும் பணிகளிலும், வலைகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களைச் சீரமைக்கும் பணிகளிலும் தற்போது தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
நள்ளிரவு முதல் தடைக்காலம் தொடங்குவதால் மேற்கு கடற்கரை துறைமுகங்கள் மற்றும் மீன்பிடித் தளங்களில் விசைப்படகுகள் வரிசையாகக் கட்டி வைக்கப்பட்டு வருகின்றன. இந்தத் தடைக்காலத்தில் விசைப்படகுகள் கடலுக்குச் செல்ல முற்றிலும் தடை விதிக்கப்பட்டுள்ளதால், பாரம்பரிய நாட்டுப் படகு மீனவர்கள் மட்டுமே வழக்கம் போல் கரைக்கடலில் மீன்பிடிக்க அனுமதிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.




