ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்பு: தமிழகம் முழுவதும் பட்டாசு வெடித்து, கேக் வெட்டி தவெகவினர் உற்சாகக் கொண்டாட்டம்!
சென்னை: தமிழகத்தின் புதிய முதலமைச்சராகத் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய் இன்று பதவியேற்பதை முன்னிட்டு, மாநிலம் முழுவதும் அக்கட்சியினர் உற்சாகக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
சமீபத்தில் முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றிய தவெக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், விசிக மற்றும் ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சிக் கட்டிலில் அமருகிறது. சென்னை மக்கள் மாளிகையில் ஆளுநரைச் சந்தித்து விஜய் ஆட்சியமைக்க உரிமை கோரிய நிலையில், அதற்கு ஆளுநர் முறைப்படி ஒப்புதல் அளித்தார். இதனைத் தொடர்ந்து, இன்று காலை 10 மணிக்கு நேரு உள் விளையாட்டு அரங்கில் பதவியேற்பு விழா நடைபெறுகிறது.
இந்த வரலாற்றுத் தருணத்தைக் கொண்டாடும் வகையில், சென்னை பனையூரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகம் முன்பு திரண்ட தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்தும், கேக் வெட்டியும், மேளதாளங்களுடன் ஆட்டம் பாட்டமாகத் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதேபோல் நெல்லை, மதுரை, திருச்சி, சேலம், ஈரோடு, கரூர் எனத் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தவெகவினர் இனிப்புகள் வழங்கியும், பட்டாசுகளை வெடித்தும் முதலமைச்சர் பதவியேற்பை ஒரு திருவிழா கோலமாகக் கொண்டாடி மகிழ்ந்து வருகின்றனர்.




