கும்பகோணத்தில் பரபரப்பு: “ரூ.3 லட்சம் பட்டுப்புடவைக்கு பணம் தரவில்லை” – ஓபிஎஸ்-க்கு எதிராக அதிமுக பிரமுகர் போஸ்டர்!
கும்பகோணம்: முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தன்னிடம் வாங்கிய பட்டுப்புடவைகளுக்கான 3 லட்சம் ரூபாய் பணத்தை வழங்காமல் ஏமாற்றிவிட்டதாகக் கூறி, அதிமுக பிரமுகர் ஒருவர் கும்பகோணம் முழுவதும் ஒட்டியுள்ள போஸ்டர்கள் பெரும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தைச் சேர்ந்த நெசவாளரும், அதிமுக பிரமுகருமான செல்வராஜ் என்பவர் இந்தப் புகாரை முன்வைத்துள்ளார். அவர் ஒட்டியுள்ள போஸ்டர்களில் குறிப்பிட்டுள்ள விவரங்களின்படி, கடந்த 2021-ம் ஆண்டு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்டோரின் உருவங்கள் நெய்யப்பட்ட, சுமார் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான பிரத்யேக தங்க ஜரிகை பட்டுப்புடவைகளை ஓ.பன்னீர்செல்வம் வாங்கியதாகக் கூறப்படுகிறது.
ஆனால், அந்தப் புடவைகளுக்கான தொகையை இதுவரை அவர் வழங்கவில்லை என்றும், இது குறித்துப் பலமுறை முறையிட்டும் பலன் கிடைக்கவில்லை என்றும் செல்வராஜ் குற்றம் சாட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர், “ஓபிஎஸ் ரூ.3 லட்சம் ஏமாற்றிவிட்டார்” என்ற வாசகங்களுடன் கும்பகோணத்தின் முக்கிய இடங்களில் போஸ்டர்களை ஒட்டியுள்ளார்.
முன்னாள் முதலமைச்சர் ஒருவருக்கு எதிராக அவரது சொந்தக் கட்சியைச் சேர்ந்த பிரமுகரே இத்தகைய பகிரங்கமான புகாரை போஸ்டர் மூலம் தெரிவித்துள்ள சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்திலும் சமூக வலைதளங்களிலும் விவாதப் பொருளாகியுள்ளது.