பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் பின்னணியில் பாகிஸ்தான் பைசல் வங்கி: என்ஐஏ விசாரணையில் அதிரடி தகவல்!
ஸ்ரீநகர்:
கொடூரமான பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் நடந்து ஓராண்டு நிறைவடைந்துள்ள சூழலில், இத்தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தானின் முன்னணி இஸ்லாமிய வங்கியான ‘பைசல் வங்கி’ (Faysal Islamic Bank) இருப்பது தேசிய புலனாய்வு முகமை (NIA) விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தசிகாம் காடுகளில் பதுங்கியிருந்த லஷ்கர்-இ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த பைசல் ஜாட், ஹபீப் தாஹிர், ஹம்சா ஆப்கானி ஆகிய மூன்று பயங்கரவாதிகள் கடந்த ஜூலை 28-ல் நடத்தப்பட்ட ‘ஆப்ரேஷன் மகாதேவ்’ நடவடிக்கையில் கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட சியோமி ரெட்மி 9T மற்றும் ரெட்மி நோட் 12 ஆகிய ஸ்மார்ட் போன்களை ஆய்வு செய்ததில், அவை கராச்சி மற்றும் லாகூர் நிறுவனங்கள் மூலம் பாகிஸ்தானிற்குள் இறக்குமதி செய்யப்பட்டது கண்டறியப்பட்டது.
இந்தப் போன்களை இறக்குமதி செய்வதற்குக் கராச்சியைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் பைசல் இஸ்லாமிய வங்கி நிதியுதவி செய்துள்ளது புலனாய்வில் தெரியவந்துள்ளது. சவுதி மன்னர் குடும்பத்திற்குச் சொந்தமான இந்த வங்கி, ஏற்கனவே அமெரிக்காவின் 9/11 இரட்டைக்கோபுரத் தாக்குதல் மற்றும் அல்கொய்தா பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி செய்த குற்றச்சாட்டிற்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது. லஷ்கர்-இ-தொய்பாவின் நிழல் அமைப்பான டி.ஆர்.எஃப் (TRF) சாஜித் ஜாட் என்பவரின் மூலம் இந்தச் சதியை ஒருங்கிணைத்ததும், பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா பகுதியிலிருந்து இயங்கிய ‘காஷ்மீர் ஃபைட்’ என்ற டெலிகிராம் சேனல் மூலம் இத்தாக்குதலுக்கு அவர்கள் பொறுப்பேற்றதும் என்ஐஏ தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் விவரிக்கப்பட்டுள்ளது.






