அதிகாரிகளின் அலட்சியம்: லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
சென்னை: நீதிமன்ற உத்தரவுகளை எதிர்த்து மேல்முறையீடு செய்யத் திட்டமிட்டே காலதாமதம் செய்யும் அரசு அதிகாரிகள், எதிர்தரப்பினருக்கு உடந்தையாகச் செயல்படுகிறார்களா என்பது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை மூலம் ரகசிய விசாரணை நடத்தத் தமிழக தலைமைச் செயலாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை முகப்பேரில் சாலை அமைப்பதற்காகக் கையகப்படுத்தப்பட்ட 27 சென்ட் நிலத்திற்கு உரிய இழப்பீடு கோரி தனியார் பள்ளி ஒன்று வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், கடந்த 2021-ம் ஆண்டு அந்த நிலத்திற்கு உரிய இழப்பீட்டை வழங்க அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால், இந்த உத்தரவை எதிர்த்து சுமார் நான்கு ஆண்டுகள் கழித்துத் தற்போது அரசுத் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, அதிகாரிகளின் செயல்பாடுகள் குறித்துக் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியது. “அரசின் கோப்புகளைக் கையாளும் அதிகாரிகள் மிகுந்த சோம்பேறித்தனத்துடன் உள்ளனர். இத்தகைய செயலற்ற தன்மையால் ஏற்பட்டுள்ள காலதாமதத்தை மன்னிக்க எந்தக் காரணமும் இல்லை” எனக் கூறி அரசின் மனுவைத் தள்ளுபடி செய்தனர்.
மேலும் நீதிபதிகள் கூறுகையில், “பல மேல்முறையீட்டு வழக்குகள் நொண்டிச் சாக்குகளைக் கூறி, நீண்ட காலதாமதத்திற்குப் பிறகே தாக்கல் செய்யப்படுகின்றன. இதற்கு அதிகாரிகளின் அலட்சியம் அல்லது அவர்கள் எதிர்தரப்பினருக்குச் சாதகமாகச் செயல்படுவதே காரணமாக இருக்க முடியும்” எனச் சுட்டிக்காட்டினர்.
எனவே, இதுபோன்ற காலதாமதங்களுக்குப் பின்னால் அதிகாரிகளின் முறைகேடுகள் ஏதேனும் ஒளிந்துள்ளதா என்பதை லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) மூலம் ரகசியமாகப் புலனாய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனத் தமிழக தலைமைச் செயலாளருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். நீதிமன்றத்தின் இந்த அதிரடி நடவடிக்கை அரசு அதிகாரிகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.