இன்று இரவு தமிழகம் வரும் பிரதமர் மோடி: இரண்டு நாள் பயணத் திட்டம் மற்றும் நலத்திட்டங்கள் குறித்த முழு விவரம்!
சென்னை: இரண்டு நாள் அரசுமுறைப் பயணமாகப் பிரதமர் நரேந்திர மோடி இன்று இரவு தமிழகம் வருகை தருகிறார். இந்தப் பயணத்தின் போது பல்வேறு புதிய நலத்திட்டங்களைத் தொடங்கி வைப்பதுடன், புகழ்பெற்ற ஆன்மீகத் தலங்களிலும் அவர் தரிசனம் செய்ய உள்ளார்.
இன்றைய பயணத் திட்டம்:
குஜராத் மாநிலம் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து தனி விமானம் மூலம் இன்று இரவு சென்னை வந்தடையும் பிரதமர், இரவு முழுவதும் சென்னையில் உள்ள மக்கள் மாளிகையில் தங்கி ஓய்வெடுக்கிறார்.
நாளைய (பிப்ரவரி 1) அதிரடிப் பயண விவரம்:
- காலை 10:20 மணி: சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரிக்குப் புறப்படுகிறார். அங்கு நடைபெறும் அரசு விழாக்களில் பங்கேற்கிறார்.
- மதியம் 12:55 மணி: புதுச்சேரியிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் தஞ்சாவூர் விமான நிலையம் சென்றடைகிறார்.
- பிற்பகல் 2:00 மணி: தஞ்சையிலிருந்து மதுரை சென்றடையும் பிரதமர், அங்கு மத்திய அரசின் பல்வேறு முடிவுற்ற திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்தும், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் உரையாற்றுகிறார்.
- மாலை 3:00 மணி அளவில்: மதுரையில் இருந்து சாலை மார்க்கமாகப் புகழ்பெற்ற திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்கிறார்.
- மாலை 4:20 மணி: அங்கிருந்து புறப்பட்டு மண்டேலா நகரில் நடைபெறும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுகிறார்.
சுமார் ஒரு மணி நேரம் 15 நிமிடங்கள் நடைபெறும் இந்தப் பொதுக்கூட்டத்தை முடித்துவிட்டு, மாலை 6:10 மணியளவில் மதுரை விமான நிலையத்திலிருந்து தனி விமானம் மூலம் பிரதமர் மோடி மீண்டும் டெல்லிக்குப் புறப்படுகிறார். பிரதமரின் வருகையை முன்னிட்டு சென்னை, புதுச்சேரி மற்றும் மதுரை ஆகிய நகரங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.