கோவை அருகே பரபரப்பு: வீடுகளுக்குச் சென்று மதமாற்றப் பிரசாரம் செய்த பெண்களை விரட்டியடித்த பொதுமக்கள்!
கோவை சூலூர் அருகே உள்ள வாகராயம்பாளையம் பகுதியில், வீடு வீடாகச் சென்று மதமாற்றப் பிரசாரத்தில் ஈடுபட்ட பெண்களைப் பொதுமக்கள் எச்சரித்து விரட்டியடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மோப்பிரிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட அம்மன் நகர் குடியிருப்பில், கையில் துண்டுப் பிரசுரங்களுடன் நுழைந்த இரண்டு பெண்கள், ஒவ்வொரு வீடாகச் சென்று ஒரு குறிப்பிட்ட மதம் குறித்துப் பேசி பிரசுரங்களை விநியோகித்துள்ளனர்.
இவர்களின் செயல்பாடுகளால் அதிருப்தியடைந்த அப்பகுதி மக்கள் மற்றும் இளைஞர்கள், அந்தப் பெண்களை வழிமறித்துச் சரமாரியாகக் கேள்வி எழுப்பினர். “எங்கள் பகுதிக்குள் அனுமதி இன்றி நுழைந்து ஏன் இது போன்ற மதப் பிரசாரங்களைச் செய்கிறீர்கள்?” எனப் பொதுமக்கள் ஆவேசமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அந்தப் பெண்கள் அளித்த பதில்கள் மக்களை மேலும் கோபமடையச் செய்த நிலையில், அவர்களை உடனடியாக அப்பகுதியை விட்டு வெளியேறுமாறு பொதுமக்கள் வலியுறுத்தினர். எதிர்ப்பு வலுத்ததைத் தொடர்ந்து அந்தப் பெண்கள் அங்கிருந்து வேகவேகமாக வெளியேறினர். இனி இந்தப் பகுதிக்குள் மதப் பிரசாரத்திற்காக வரக்கூடாது என எச்சரித்த பொதுமக்கள், அவர்களைப் பின்தொடர்ந்து சென்று அப்பகுதியிலிருந்து விரட்டியடித்தனர்.