வலங்கைமான் பகுதியில் அரசுப் பள்ளியில் பாம்பு கடி – 11ஆம் வகுப்பு மாணவன் பலி
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே அமைந்துள்ள அரசுப் பள்ளியில் பாம்பு கடித்ததில், சிகிச்சை பலனளிக்காமல் 11ஆம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
கேத்தனூர் கிராமத்தைச் சேர்ந்த முருகானந்தம் என்பவரின் மகன் சிவப்பிரகாசம், அரித்துவாரமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு பயின்று வந்தார். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வகுப்பறையில் புத்தகங்களை எடுக்கச் சென்றபோது, அங்கு மறைந்திருந்த கட்டு விரியன் பாம்பு அவரை கடித்ததாக கூறப்படுகிறது.
அந்த நேரத்தில் மாணவனின் தங்கை சிவசங்கரியும் அருகில் இருந்துள்ளார். தகவல் அறிந்த ஆசிரியர்கள் உடனடியாக சிவப்பிரகாசத்தை தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
ஆனால், தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் மாணவன் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பள்ளி வளாகத்திற்குள் பாம்பு நுழைந்தது எப்படி என்ற கேள்வியை எழுப்பிய பெற்றோர், மாணவர்களின் பாதுகாப்பில் பள்ளி நிர்வாகம் கவனக்குறைவாக நடந்துகொண்டதாக குற்றம்சாட்டினர்.
இதனைத் தொடர்ந்து, மாவட்ட கல்வி அலுவலர் ராஜேஸ்வரி தலைமையில் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுகப்பிரியா உத்தரவிட்டுள்ளார்.