“காலை 10 மணிக்குள் பயோமெட்ரிக் கட்டாயம், ஐடி கார்டு அனிவது கட்டாயம்” – தலைமைச் செயலகப் பணியாளர்களுக்குத் தமிழக அரசு அதிரடி உத்தரவு!
சென்னை:
தமிழக அரசின் மிக முக்கியத் துறையான மனிதவள மேலாண்மைத் துறையில் பணியாற்றும் அனைத்து நிலைத் தலைமைச் செயலக அதிகாரிகளும், அலுவலர்களும் ஜூன் மாதம் 1-ஆம் தேதி முதல் பயோமெட்ரிக் (Biometric) முறையில் வருகைப்பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுத் தமிழக அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக மனிதவள மேலாண்மைத்துறை அனைத்துத் துறைப் பிரிவுகளுக்கும் அதிகாரப்பூர்வ அவசரச் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அரசுப் பணிகளில் நிர்வாகத் திறனை மேம்படுத்தவும், காலதாமதத்தைத் தவிர்க்கவும் இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அரசு வெளியிட்டுள்ள அந்தப் புதிய வழிகாட்டுதல் சுற்றறிக்கையின்படி, மனிதவள மேலாண்மைத் துறையில் தற்காலிக மற்றும் நிரந்தரப் பணியில் இருக்கும் அனைத்து நிலை அதிகாரிகளும், அலுவலர்களும் வரும் 1-ஆம் தேதி முதல் காலை 10:00 மணிக்குள் தங்களது பயோமெட்ரிக் வருகைப்பதிவைச் செயலக வளாகத்தில் முறைப்படி பதிவு செய்ய வேண்டும் எனத் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பணி நேரத்தில் தலைமைச் செயலகத்தில் இருக்கும் அனைத்து அதிகாரிகளும், ஊழியர்களும் தங்களது அதிகாரப்பூர்வப் பணி அடையாள அட்டையை (Identity Card) கண்டிப்பாகக் கழுத்தில் அணிந்திருக்க வேண்டும் என்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தலைமைச் செயலகப் பணியாளர்களின் வருகை மற்றும் ஒழுங்குமுறையைக் கண்காணிக்கும் பொருட்டு, மனிதவள மேலாண்மைத் துறையில் முன்னோட்டமாக (Pilot Project) அமல்படுத்தப்படும் இந்த அதிநவீன டிஜிட்டல் வருகைப்பதிவு முறை, வரும் காலங்களில் தலைமைச் செயலகத்தின் மற்ற அனைத்துத் துறைகளுக்கும் படிப்படியாக விரிவாக்கம் செய்யப்படும் எனத் தலைமைச் செயலக அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தமிழக அரசின் இந்தத் திடீர் அதிரடி உத்தரவு, தலைமைச் செயலகப் பணியாளர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



