சேலம் புறநகரில் கோயில் திருவிழாவில் நடன விவகாரம் – இரு தரப்பினர் மோதலில் நால்வர் பலத்த காயம்
சேலம் மாவட்டம் சன்னியாசி குண்டு பகுதியில் அமைந்துள்ள காளியம்மன் கோயிலில் நடைபெற்ற திருவிழாவின் போது, நடன நிகழ்ச்சியைச் சுற்றி ஏற்பட்ட தகராறால் இரு குழுக்களுக்கிடையே கடும் மோதல் வெடித்தது. இந்த சம்பவத்தில் நான்கு பேர் தீவிரமாக காயமடைந்துள்ளனர்.
நடனமாடுவது தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதம், பின்னர் வன்முறையாக மாறியதாக கூறப்படுகிறது. கஞ்சா போதையில் இருந்த சுமார் 20 பேர் கொண்ட ஒரு குழு, அரிவாள் மற்றும் கட்டைகள் போன்ற ஆயுதங்களை பயன்படுத்தி எதிர் தரப்பினரை தாக்கியுள்ளனர்.
அதுமட்டுமல்லாமல், அந்தக் கும்பல் அருகிலுள்ள வீடுகளில் நுழைந்து அங்கிருந்த பொருட்களையும் சேதப்படுத்தி கொள்ளையடித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தாக்குதலில் மணிமாறன், கதிரவன், விஜி உள்ளிட்ட நால்வர் கடுமையாக காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவத்துக்குப் பிறகு தாக்குதலில் ஈடுபட்டவர்கள் தப்பியோடிய நிலையில், அவர்களை கண்டறிந்து கைது செய்ய போலீசார் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.